Published : 21 Feb 2017 05:02 PM
Last Updated : 21 Feb 2017 05:02 PM
ஜமாத்-உத்-தவா தீவிரவாத அமைப்பின் தலைவர் ஹபீஸ் சயீது பாகிஸ்தானுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக உள்ளார் என அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிப் தெரிவித்துள்ளார்.
ஜெர்மனியின் முனிச் நகரில் கடந்த 17-ம் முதல் 19-ம் தேதி வரை சர்வதேச பாதுகாப்பு மாநாடு நடைபெற்றது. இதில் பங்கேற்ற கவாஜா ஆசிப் பேசியதாவது:
ஜமாத்-உத்-தவா அமைப்பின் தலைவர் ஹபீஸ் சயீது நாட்டின் பாதுகாப்புக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக உள்ளார். எனவே நாட்டு மக்களின் நலனை கருத்தில் கொண்டு அவரை கைது செய்துள்ளோம்.
தீவிரவாதம் என்பது எந்த மதத்துடனும் தொடர்புடையது அல்ல. இத்தகைய செயலில் ஈடுபடும் அனைவரும் தீவிரவாதிகள், குற்றவாளிகள் ஆவர்.
தீவிரவாதத்துக்கு எதிராக போரிட வேண்டும் என்பதில் பாகிஸ்தான் உறுதியாக உள்ளது என்பதை உலக நாடுகளுக்கு தெரிவித்துக் கொள்கிறேன். இந்த விவகாரத்தில் எங்கள் நாட்டு மக்களுக்கும் சர்வதேச சமுதாயத்துக்கும் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற தொடர்ந்து பாடுபடுவோம்.
ஆனால், மேற்கத்திய நாடுகளின் கொள்கைகள் சில நாடுகளை தனிமைப்படுத்தும் வகையில் அமைந்தால் தீவிரவாதத்தை ஒழிக்க முடியாது. மாறாக அது தீவிரவாதத்துக்கு தூபம் பொடுவதாகவே அமையும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
கடந்த 2008-ம் ஆண்டு 166 பேரை பலி வாங்கிய மும்பை தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்டவர் ஹபீஸ் சயீது. இவரை கைது செய்து ஒப்படைக்க வேண்டும் என்ற இந்தியாவின் கோரிக்கையை பாகிஸ்தான் நிராகரித்துவிட்டது.
அமெரிக்க அரசும் இவரது தலைக்கு 10 மில்லியன் டாலர்களை பரிசாக அறிவித்திருந்தது. ஆனாலும் பாகிஸ்தான் நடவடிக்கை இல்லை. இந்நிலையில் அமெரிக்காவின் புதிய அதிபராக டொனால்ட் ட்ரம்ப் பொறுப்பேற்றதும் அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
இந்நிலையில்தான் பாகிஸ்தான் அரசு, தீவிரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் ஹபீஸ் சயீதை கைது செய்து வீட்டுச் சிறையில் வைத்திருப்பதாக தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT