அமெரிக்க ஃபேஷன் ஷோவில் கவனம் ஈர்த்த ஆசிட் வீச்சில் மீண்ட இந்தியப் பெண்!

அமெரிக்க ஃபேஷன் ஷோவில் கவனம் ஈர்த்த ஆசிட் வீச்சில் மீண்ட இந்தியப் பெண்!
Updated on
1 min read

"அழகு என்பது தோலில் இல்லை" எனும் விதமாக, நியூயார்க் ஃபேஷன் வீக் ஷோவில் அனைவரது இதயத்தையும் கவர்ந்திருக்கிறார் ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்டு மீண்ட இந்திய பெண் ரேஷ்மா குரேஷி.

19 வயதான ரேஷ்மா குரேஷி தனது அக்காவின் கணவரால் ஆசிட் வீச்சு தாக்குதலுக்கு உள்ளானவர். இந்த ஆசிட் வீச்சில் ரேஷ்மாவின் ஒரு கண்ணில் பார்வை பறிபோனது.

அதைத் தொடர்ந்து, ஆசிட் வீச்சுக்கு எதிரான போராட்டங்களில் பங்கெடுத்து வருகிறார் ரேஷ்மா. அதுமட்டுமில்லாது ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ’Make Love Not Scars’ என்ற தொண்டு நிறுவனத்திற்காக யூடியூபில் தனது வீடியோக்களை பதிவேற்றி வருகிறார். குறிப்பாக, பெண்களுக்கு எதிரான குற்றங்களைப் பற்றியும் தனது வீடியோக்களில் பதிவேற்றி வருகிறார் ரேஷ்மா.

ஆசிட் வீச்சில் பாதிக்கப்படுவதற்கு முன் ரேஷ்மா குரேஷி

இந்த நிலையில்தான் எஃப் டி எல் மோடா (fdl moda) என்ற தனியார் நிறுவனத்தின் சார்பாக நியூயார்க் ஃபேஷன் வீக்கில் பங்கேற்க ரேஷ்மா குரேஷிக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.

இதனையடுத்து வியாழக்கிழமை நடைபெற்ற ஃபேஷன் வீக்கில் இந்திய ஆடை வடிவமைப்பாளர் அர்ச்சனா கோச்சார் வடிமைந்த வெள்ளை நிற ஆடையை அணிந்து நம்பிக்கையுடன் நடந்து வந்த ரேஷ்மாவின் பேச்சு அங்கிருந்த அனைவரது இதயத்தையும் கவர்துள்ளது.

நியுயார்க் ஃபேஷன் வீக்கில் கலந்து கொண்டது குறித்து ரேஷ்மா குரேஷி கூறும்போது, "நான் இந்த நிகழ்வுக்காக தயாராகி கொண்டிருந்தபோது என்னை புகைப்படக்காரர்கள் சூழ்ந்து கொண்டனர். உண்மையில் இந்த தருணம் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி அளித்துள்ளது.

ஃபேஷன் வீக்கில் நான் கலந்து கொண்டதன் மூலம் ஆசிட் வீச்சில் பாதிக்கப்பட்ட என்னை போன்ற பெண்களும் சராசரி பெண்களின் வாழ்க்கையை வாழ முடியும் என்று பிறருக்கு புரிந்து கொள்ள வாய்ப்பு கிடைத்துள்ளது.

அழகு என்பது தோலில் கிடையாது. புத்தகத்தின் முகப்பை பார்த்து அந்தப் புத்தகத்தை தீர்மானிக்காதீர்கள்.

நான் இந்த உலகத்துக்கு ஒன்று கூற விரும்புகிறேன். இனி நாங்கள் அடைந்து போக மாட்டோம்; நாங்களும் வெளியுலகத்தில் பயணித்து சாதனைகள் புரிவோம்" என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in