Published : 22 Dec 2013 12:00 AM
Last Updated : 22 Dec 2013 12:00 AM

ஈரான் மீது புதிய தடை விதிக்கத் தேவையில்லை: பராக் ஒபாமா

ஈரான் மீது புதிதாக பொருளாதாரத் தடைகளை விதிக்கத் தேவையில்லை என்று அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா தெரிவித்தார்.

வெள்ளை மாளிகையில் நிருபர்களுக்கு வெள்ளிக்கிழமை பேட்டியளித்த அவர் கூறியதாவது:

ஈரானின் அணுஆயுதத் திட்டம் அமெரிக்காவின் பாதுகாப்புக்கு பெரும் அச்சுறுத்தலாக இருந்து வந்தது. இந்நிலையில் அந்த நாட்டுடன் இப்போது நடத்தப்பட்டுவரும் பேச்சுவார்த்தைகள் நல்ல பலனை அளித்துள்ளன. தனது அணுசக்தித் திட்டங்களை இப்போதைய நிலையிலேயே நிறுத்திக் கொள்ள அந்த நாடு உறுதியளித்துள்ளது. ஈரான் அணுஆயுதங்களை தயாரிக்கவில்லை என்பதை உறுதி செய்ய மற்ற நாடுகள் ஆய்வு நடத்தவும் ஒப்புதல் அளித்துள்ளது. அணுசக்தியை ஆக்கப்பூர்வ பணிகளுக்கு மட்டுமே பயன்படுத்துவோம் என்றும் உறுதியளித்துள்ளது. எனவே ஈரான் மீது புதிதாகத் பொருளாதாரத் தடை விதிக்கத் தேவையில்லை. ஒருவேளை ஒப்பந்தத்தை ஈரான் மீறினால் அந்த நாடு மீது புதிதாக பொருளாதாரத் தடை விதிக்க அமெரிக்கா ஆதரவு அளிக்கும்.

ஈரான் அணுஆயுதங்களை தயாரிக்கக் கூடாது என்பதுதான் எனது நோக்கம். இந்த விவகாரத்தில் ராஜ்ஜியரீதியிலான பேச்சுவார்த்தை மூலம் சுமுக தீர்வை எட்ட விரும்புகிறேன் என்று அதிபர் ஒபாமா தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x