

பாகிஸ்தானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.3- ஆக பதிவாகியது.
இந்த நிலநடுக்கம் குறித்து அமெரிக்க புவியியல் மையம் வெளியிட்ட தகவலில், "பாகிஸ்தானின் கடற்கரை பகுதியில் இன்று (புதன்கிழமை) அதிகாலை 3.03 மணியளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.3- ஆக பதிவாகியது.
நிலநடுக்கத்தின் மையம் பாகிஸ்தானின் தென்மேற்கு பகுதியில் அமைந்துள்ள பஸ்னி கடற்கரை நகரை மையமாகக் கொண்டுள்ளது" என்று கூறப்பட்டுள்ளது.
இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து உடனடி தகவல் ஏதும் வெளிவரவில்லை.
கடந்த 2015-ஆம் ஆண்டு பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்துக்கு 400 பேர் பலியாகினர்.
மேலும், கடந்த 2005- ஆம் ஆண்டு பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் ரிக்டர் அளவுகோலில் பதிவான 7.6 சக்தி வாய்ந்த நிலநடுக்கத்துக்கு 73,000 பேர் பலியாகினர். 3 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் தங்கள் வீடுகளை இழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.