Last Updated : 07 Jul, 2016 02:25 PM

 

Published : 07 Jul 2016 02:25 PM
Last Updated : 07 Jul 2016 02:25 PM

சீனாவில் கனமழையால் பெரும் வெள்ளம்: 181 பேர் கதி என்ன?

மத்திய மற்றும் தெற்கு சீனாவில் கடந்த ஒரு வாரமாக பெய்து வரும் கன மழையினால் கடுமையான வெள்ள பெருக்கு ஏற்பட்டுள்ளது.

குறிப்பாக வூஹான் நகரம் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. சுமார் 80 லட்சம் பேர் வசிக்கும் இப்பகுதியில் வீடுகள் பல வெள்ள நீரில் மூழ்கியுள்ள நிலையில் 181 பேரை காணவில்லை. இவர்கள் நீரில் மூழ்கி இறந்தனரா, இல்லை எங்காவது சிக்கிக் கொண்டுள்ளனரா எனத் தெரியவில்லை.

சீனாவின் வூவாந் நகரத்தின் யாங்சே ஆற்றங்கரையில் கடந்த ஒரே வாரத்தில் 57.4 சென்டிமீட்டர் மழை பெய்துள்ளதாக சீன வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அந்நகரத்தின் முக்கிய அதிகாரி ஒருவர் இதுகுறித்து தனியார் தொலைக்காட்சியிடம், வெள்ளத்தில் சிக்கி 14 பேர் இறந்துள்ளதாகக் கூறினார்.

கிட்டத்தட்ட 170,000 குடியிருப்பு வாசிகள் தங்களது குடியிருப்பைவிட்டு இடம்பெயர்ந்துள்ளனர். 80,000க்கு அதிகமான மக்கள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டு வருகின்றன.

வரலாறு காணாத வெள்ளத்தால் சீனாவின் முக்கிய நகரங்கள், கிராமங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. வெள்ளத்தினால் பெரும்பாலான பகுதிகளில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும், படகு மூலம் பல்வேறு பகுதிகளில் ஆய்வு மேற்கொண்ட சீன அதிபர் ஜி ஜின்பிங் ராணுவம் மற்றும் பேரிடர் மீட்புப் படையினர் அப்பகுதி மக்களுக்கு உதவ உத்தரவிட்டுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x