

அணு மூலப்பொருட்கள் விநியோக குழுவில் (என்.எஸ்.ஜி.) இந்தியா இணைந்தால் தெற்காசியாவின் பாதுகாப்பு கேள்விக்குறியாகும் என்று சீனா தெரிவித்துள்ளது.
என்.எஸ்.ஜி.யில் இந்தியா இணைந்தால் தெற்காசியாவில் அணுஆயுதப் போட்டி அதிகரிக் கும் என்று சீன அரசு ஊடகமான குளோபல் டைம்ஸ் பத்திரிகை தலையங்கத்தில் சில நாட்களுக்கும் முன்பு விமர்சனம் செய்யப்பட்டது.
ராணுவ பயன்பாடு
இதைத் தொடர்ந்து என்எஸ்ஜி விவகாரம் தொடர்பாக குளோபல் டைம்ஸ் நேற்று தனது தலையங்கத் தில் மீண்டும் இந்தியாவை குறித்து விமர்சனம் செய்துள்ளது. அதில் கூறியிருப்பதாவது:
என்.எஸ்.ஜி.யில் இந்தியா இணைந்தால் தனது அணுமின் நிலையங்களுக்கு தேவையான எரிபொருள், தொழில்நுட்பத்தை வெளிநாடுகளிடம் இருந்து பெற்றுக் கொள்ளும். அதேநேரம் உள்ளூரில் கிடைக்கும் அணுகச்தி மூலப் பொருட்களை தனது ராணுவ தேவைக்குப் பயன்படுத்திக் கொள்ளும்.
தற்போது இந்தியாவும் பாகிஸ் தானும் அணுசக்தி நாடுகளாக உள்ளன. இந்தியா என்.எஸ்.ஜி.யில் உறுப்பினரால் பாகிஸ்தானுக்கு பெரும் பின்னடைவு ஏற்படும். அதுமட்டுமல்ல தெற்காசிய பிராந் தியத்தின் பாதுகாப்பும் கேள்விக் குறியாகும்.
அணுஆயுத பரவல் தடை ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத் திட்டால் அந்த நாட்டுக்கு ஆதரவு அளிப்பதில் சீனாவுக்கு தயக்கம் இல்லை. ஆனால் அமெரிக்காவின் ஆதரவுடன் ஒப்பந்தத்தில் கையெழுத்திடாமலேயே என்.எஸ்.ஜி.யில் உறுப்பினராக இந்தியா முயற்சிக்கிறது.
அமெரிக்கா ஆதரவு
சீனாவை கட்டுப்படுத்த வேண்டும் என்ற ஒரே நோக்கத்தில் இந்தியாவை அமெரிக்கா ஆதரிக் கிறது. என்.எஸ்.ஜி.யின் இதர நாடு களின் இந்தியாவின் வர்த்தக சந்தை வாய்ப்பை கருத்திற்கொண்டு ஆதரவு அளிக்கின்றன.
சீனா, நியூசிலாந்து, அயர்லாந்து, துருக்கி, தென்ஆப்பிரிக்கா, ஆஸ் திரியா உள்ளிட்ட நாடுகள் மட்டுமே எதிர்ப்பு தெரிவிக்கின்றன. அணு ஆயுத தடை பரவல் ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திடாதவரை சீனாவின் எதிர்ப்பு தொடரும்.
என்.எஸ்.ஜி.யில் இந்தியா சேர்க்கப்பட்டால் அந்த நாட்டுக்கு சட்டப்பூர்வமாக அணுவல்லரசு அங்கீகாரம் அளித்தது போலாகும். இது மற்ற நாடுகளுக்கு தவறான முன்னுதாரணமாகிவிடும்.
இவ்வாறு அந்த தலையங்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தியாவை உறுப்பினராக சேர்ப்பது குறித்து வரும் 24-ம் தேதி தென்கொரிய தலைநகர் சியோலில் நடைபெறும் என்.எஸ்.ஜி. மாநாட்டில் முடிவு எடுக்கப்பட உள்ளது.