Published : 06 Dec 2013 12:00 AM
Last Updated : 06 Dec 2013 12:00 AM

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் மீது நடவடிக்கை எடுக்க நீதிமன்றம் உத்தரவு

வளர்ச்சி நிதி முறைகேடு தொடர்பாக பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் பர்வேஸ் அஷ்ரஃப் மற்றும் சிலர் மீது நடவடிக்கை எடுக்குமாறு அந்நாட்டு உச்ச நீதிமன்றம் அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.

அரசு வளர்ச்சித் திட்ட நிதியை தனக்கு வேண்டியவர்களுக்கு தன் விருப்பம்போல் ஒதுக்கீடு செய்ததன் மூலம் அஷ்ரஃப் தனது அதிகாரத்தை முறைகேடாகப் பயன்படுத்தியுள்ளார் என்று தலைமை நீதிபதி இஃப்திகார் சௌத்ரி தலைமையிலான, 3 நீதிபதிகள் கொண்ட அமர்வு கூறியுள்ளது. அஷ்ரஃப் தலைமையிலான பாகிஸ்தான் மக்கள் கட்சி அரசு தனது இறுதிக் காலத்தில் ரூ. 5 ஆயிரத்து 200 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு ஒப்புதல் வழங்கியது. இதில் முறைகேடு குற்றச்சாட்டு எழுந்ததை தொடர்ந்து, இதன் பயனாளிகளை கண்டறியுமாறு மத்திய புலனாய்வு அமைப்புக்கு (எஃப்ஐஏ) உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

பாகிஸ்தான் திட்டக்குழுவின் விதிமுறைகளை மீறி அஷ்ரஃப் இந்த நிதியை விடுவித்துள்ளதாக உச்ச நீதிமன்றத்தில் கடந்த ஜூன் மாதம் அரசு வழக்கறிஞர் தெரிவித்தார். பாகிஸ்தான் கணக்கு தணிக்கை அதிகாரி அளித்த அறிக்கையில், “வளர்ச்சித் திட்டங்களுக்கான நிதியை பிற பயன்பாட்டுக்கு மாற்ற பிரதமருக்கு உரிமை உள்ளது. ஆனால் சம்பந்தப்பட்ட அமைச்சகங்களை கலந்தாலோசித்த பிறகே இவ்வாறு மாற்ற முடியும். இந்த விதிகளை முன்னாள் பிரதமர் பின்பற்றவில்லை” என்று தெரிவித்தது.

விசாரணையின் போது தலைமை நீதிபதி இஃப்திகார் சௌத்ரி கூறுகையில், “விமானப் போக்குவரத்து ஆணைய அதிகாரிக்கு, ஆலோசனைக் கூட்டம் நடத்துவதற்காக ரூ.2 கோடி வழங்கப்பட்டுள்ளது. இது மிகப்பெரிய முறைகேடு” என்றார்.

நீதிமன்றத்தில் பொதுப்பணித் துறை இயக்குநர் சர்வான் அவான் கூறுகையில், வளர்ச்சி நிதி என்ற பெயரில் சாக்வால் மாவட்டத்தைச் சேர்ந்த 3 பேருக்கு ரூ.1.40 கோடி வழங்கப்பட்டுள்ளது” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x