Published : 30 Aug 2016 09:27 AM
Last Updated : 30 Aug 2016 09:27 AM
அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் விமான நிலையத்தில் பிளாஸ்டிக் வாளுடன் சுற்றித் திரிந்த முகமூடி மனிதனால் திடீர் பதற்றம் ஏற்பட்டது. இதனால் சுமார் 3 மணி நேரம் விமான நிலையம் மூடப்பட்டது.
லாஸ் ஏஞ்சல்ஸ் விமான நிலையத்தில் நேற்று முன்தினம் இரவு முகமூடி அணிந்த தீவிரவாதிகள் புகுந்து தாக்குதல் நடத்துவதாக தகவல் பரவியது. இதனால் பயணிகள் நாலாபுறமும் சிதறி ஓடினர். விமான நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டு விமான சேவைகள் நிறுத்தப்பட்டன.
பாதுகாப்புப் படையினர் விமான நிலையம் முழுவதும் அங்குலம் அங்குலமாக சோதனை நடத்தினர். அப்போது ஒரு பகுதியில் முகமூடி அணிந்து கையில் வாளுடன் மர்ம நபர் சுற்றித் திரிந்தார்.
அந்த நபரை பாதுகாப்புப் படை வீரர்கள் சுற்றி வளைத்தனர். அப்போது அவர், எனது கையில் இருப்பது பிளாஸ்டிக் வாள், நான் தீவிரவாதி அல்ல என்று கூறியவாறு தரையில் படுத்துக் கொண்டார். அவரை போலீஸார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
முகமூடி மனிதரின் வினோத நடவடிக்கையால் அவரை தீவிர வாதி என்று கருதி பயணிகள் மத்தியில் கூச்சல், குழப்பம் ஏற் பட்டதாக போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன. கடந்த 14-ம் தேதி நியூயார்க் விமான நிலையத்தில் தீவிரவாதிகள் ஊடுருவியிருப்ப தாக பரவிய வதந்தியால் பல மணி நேரம் விமான சேவை பாதிக்கப்பட்டது நினைவுகூரத் தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT