Published : 12 May 2017 09:19 AM
Last Updated : 12 May 2017 09:19 AM

சீன அதிபர், ஜப்பான் பிரதமருடன் தென்கொரிய புதிய அதிபர் ஆலோசனை

தென்கொரியாவின் புதிய அதிபர் மூன் ஜே-இன் நேற்று சீன அதிபர் ஜி ஜின்பிங், ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே ஆகியோருடன் தொலைபேசியில் ஆலோசனை நடத்தினார்.

தென்கொரிய அதிபர் தேர்த லில் ஜனநாயக கட்சியைச் சேர்ந்த மூன் ஜே-இன் வெற்றி பெற்று நேற்று முன்தினம் அதிபராக பதவியேற்றார். வடகொரியாவின் அணுஆயுத திட்டத்தால் கொரிய தீபகற்பத்தில் தற்போது போர் மேகம் சூழ்ந்துள்ளது.

இந்த விவகாரம் தொடர்பாக சீன அதிபர் ஜி ஜின்பிங்குடன் தென்கொரிய அதிபர் மூன் ஜே-இன் நேற்று தொலைபேசியில் 40 நிமிடங்கள் ஆலோசனை நடத்தினார். இதேபோல ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபேவுடனும் மூன் ஜே-இன் தொலைபேசியில் பேசினார். ஜப்பானுக்கும் தென் கொரியாவுக்கும் இடையே பல்வேறு கருத்து வேறுபாடுகள் நிலவுகின்றன. எனினும் வட கொரியாவின் அச்சுறுத்தல்களைச் சமாளிக்க இரு நாடுகளும் இணைந்து செயல்படுகின்றன.

வடகொரியாவுக்கு அரசு முறை பயணம் செல்ல தயாராக இருப்பதாக மூன் ஜே-இன் தெரிவித்துள்ளார். அதன்படி தற்போது எழுந்துள்ள பதற்றத்தை அமைதி பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க புதிய அதிபர் முயற்சி மேற்கொண்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x