Last Updated : 06 Nov, 2014 10:40 AM

 

Published : 06 Nov 2014 10:40 AM
Last Updated : 06 Nov 2014 10:40 AM

ஜப்பானில் வேலைப்பளுவால் ஓட்டல் ஊழியர் தற்கொலை: ரூ.3 கோடி இழப்பீடு வழங்க நீதிமன்றம் உத்தரவு

ஜப்பான் நாட்டில் அதிக வேலைப்பளுவால் பாதிப்படைந்த உணவு விடுதி ஊழியர் ஒருவர் தற்கொலை செய்துகொண்டார். அந்த வழக்கில் அவரின் உறவினர்களுக்கு 5 லட்சம் அமெரிக்க டாலர்கள் (சுமார் ரூ.3 கோடி) இழப்பீடு வழங்க அந்நாட்டு நீதிமன்றம் அந்த உணவு விடுதிக்கு உத்தரவிட்டுள்ளது.

டோக்கியோ நகரத்தில் ‘சன் சேலஞ்ச்' எனும் பெயரில் உணவு விடுதி ஒன்று செயல்பட்டு வருகிறது. இதில் பணியாற்றும் ஊழியர்களில் ஒருவர் மாதத்துக்கு 200 மணி நேரங்களுக்கு மேல் ‘ஓவர்டைம்' ஆக பணியாற்ற கட்டாயப்படுத்தப்பட்டார். மேலும் அவரை தகாத வார்த்தைகளால் அவரது உயரதிகாரிகள் திட்டியுள்ளனர்.

இதன் காரணமாக மன அழுத்தத்துக்கு உள்ளாகி, அந்த ஊழியர் ஏழு மாதங்களுக்கு முன்பு தற்கொலை செய்துகொண்டார். அந்த ஊழியரின் அடையாளம் வெளியிடப்படவில்லை. இதுதொடர்பான விசாரணையில், 24 வயதே ஆன அந்த ஊழியர் 2007ம் ஆண்டில் இருந்து பணியாற்றி வந்ததாக‌வும், கடந்த 2009ம் ஆண்டு அவர் உணவு விடுதியின் மேலாளராக நியமிக்கப்பட்டார் எனவும் தெரியவந்துள்ளது.

இந்த வழக்கை விசாரித்த டோக்கியோ நீதிமன்றம் அந்த ஊழியரின் குடும்பத்துக்கு ரூ.3 கோடி இழப்பீடு வழங்க உத்தரவிட்டுள்ளது. ஜப்பானில் உள்ள நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களை நீண்ட நேரம் பணியாற்றக் கட்டாயப்படுத்துவதும், ‘ஓவர்டைம்' பணிகளுக்கு ஊதியம் தராமல் இருப்பதும் தொடர்ந்து விமர்சனத்துக்கு உள்ளாகி வருகின்றன.

இதைத் தொடர்ந்து ‘அதிக வேலைப்பளுவால் இறப்பு' எனும் பொருள் தரும் ‘கரோஷி' எனும் ஜப்பானிய வார்த்தை கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு உலக அகராதிகளில் இடம்பிடித்தது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x