Published : 08 Jan 2014 09:34 AM
Last Updated : 08 Jan 2014 09:34 AM

மேற்கு அமெரிக்காவைத் தாக்கியது பனிப்புயல்: தொடர் விபத்தில் 375 வாகனங்கள் மோதல்

அமெரிக்காவின் வடக்குப் பகுதி மற்றும் கனடாவில் வீசிய கடும் பனிப்புயல் தற்போது மத்திய மேற்கு அமெரிக்கா பகுதிகளில் வீசுகிறது. இதனால் அங்கு தட்பவெட்ப நிலை உறைநிலைக்குக் கீழாக மைனஸ் 31 டிகிரி செல்சியஸ் அளவுக்குச் சென்றுள்ளது.

மினியாபோலிஸ் பகுதியில் ஞாயிற்றுக் கிழமை மைனஸ் 18 டிகிரி செல்சியஸ் இருந்த தட்பவெட்ப நிலை, திங்கள்கிழமை மைனஸ் 31 டிகிரி செல்சியஸாகக் குறைந் தது. காற்றில் குளிரின் அளவு மைனஸ் 45 டிகிரி செல்சியஸாக அதிகரித்துள்ளது.

ஒக்லஹோமா, டெக்ஸாஸ், இன்டியானா பகுதிகளிலும் மைனஸ் 40 டிகிரி செல்சியஸ் அளவுக்கு தட்பவெட்ப நிலை குறைந்தது. அலாபாமா, பால்டிமோர், ஜார்ஜியா, மேரிலேண்ட் உள்ளிட்ட பகுதிகளிலும் கடும் குளிர் நிலவுகிறது. கடந்த 20 ஆண்டுகளில் பதிவான மிகக் கடும்குளிராக இது கருதப்படுகிறது.

இதனால், அமெரிக்காவின் மத்திய மேற்குப் பகுதி முழுவதும் பனியால் மூடப் பட்டுள்ளது. பெரும்பாலான இடங்களில் சாலைப் போக்குவரத்து முடங்கியுள்ளது. சுமார் 1.87 கோடி மக்கள் பனிப்புயலால் பாதிக்கப்பட்டுள்ளனர். அமெரிக்காவின் கிழக்கு, தெற்கு பகுதி களிலும் கடுமையான குளிர் நிலவுகிறது.

பெரும்பாலான பகுதிகளில் பள்ளி, குழந்தைகள் காப்பகங்கள் மூடப்பட்டுள்ளன. சாலைகளில் ஓரடி உயரத்துக்கும் அதிக மாக பனிபடிந்துள்ளது. கார்கள் உள்ளிட்ட வாகனங்கள் முற்றிலு மாக பனியால் மூடப்பட்டுள்ளன.

தொடர் விபத்து

இல்லினாய்ஸ் மாகாணத்தில் 375க்கும் மேற்பட்ட வாகனங்கள் அடுத்தடுத்து மோதி விபத்துக்குள்ளாயின. கடும் பனிமூட்டம் காரணமாக இவ்விபத்து நிகழ்ந்துள்ளது. இருப்பினும் யாருக்கும் பெரிய அளவில் காயம் ஏற்படவில்லை. வாகனங்களில் இருந்து யாரும் வெளி யேற முடியாததால், அவர்கள் மீட்புப் படையினரால் மீட்கப்பட்டனர் என இல்லி னாய்ஸ் அவசரகால மேலாண்மைத் துறை இயக்குநர் ஜோனதன் மோங்கன் தெரிவித்தார். சில பகுதிகளில் கடும் குளிர் காரணமாக மரணம் சம்பவித்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. மிசெளரி பகுதியில் காரில் இருந்த ஒரு வயதுக் குழந்தை குளிர் தாங்காமல் இறந்து விட்டதாகக் கூறப்படுகிறது.-பி.டி.ஐ.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x