தாய்லாந்து ராணுவ தலைமையகத்தில் முற்றுகை போராட்டம்

தாய்லாந்து ராணுவ தலைமையகத்தில் முற்றுகை போராட்டம்
Updated on
1 min read

தாய்லாந்தில் பிரதமர் இங்லக் ஷினவத்ராவை பதவி விலக வலியுறுத்தி, ராணுவ தலைமையகம் மற்றும் ஆளுங்கட்சி தலைமை அலுவலகத்தை முற்றுகையிட்டு எதிர்கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ராணுவ தலைமையக வளாகத்துக்குள் நுழைந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட போராட்டக்காரர்கள், அங்கு முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும், ஆளும்கட்சியான பிய் தாய் கட்சியின் தலைமையகத்தையும் போராட்டக்காரர்கள் முற்றுகையிட்டு, பிரதமரைப் பதவி விலக வலியுறுத்தி கோஷங்களை எழுப்பி வருகின்றனர்.

இதன் காரணமாக, ராணுவ வளாகத்திலும், ஆளும்கட்சி தலைமை அலுவலகத்திலும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

போராட்டக்காரர்களுக்கு எதிராக போலீஸ் படையையோ, ராணுவத்தையோ பயன்படுத்த மாட்டோம் என பிரதமர் இங்லக் ஷினவத்ரா கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக, தாய்லாந்தில் பிய் தாய் கட்சி தலைமையிலான கூட்டணி அரசில் பல்வேறு ஊழல், முறைகேடுகள் நடைபெற்று வருவதாக எதிர்க்கட்சியாக ஜனநாயகக் கட்சி குற்றம் சாட்டியுள்ளது. இதற்குப் பொறுப்பேற்று ஆளும் கூட்டணி அரசு பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தி கடந்த சில நாள்களாக எதிர்க்கட்சியினர் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

பிரதமரைப் பதவி விலக வலியுறுத்தி, ஜனநாயகக் கட்சி சார்பில் கடந்த வியாழக்கிழமை கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லாத் தீர்மானத்தில், இங்லக் ஷினவத்ரா வெற்றிபெற்றார். போராட்டத்தைக் கைவிடும்படியும், போராட்டக்காரர்களுடன் அரசு பேச்சுவார்த்தை நடத்தத் தயாராக உள்ளது எனவும் பிரதமர் ஷினவத்ரா வேண்டுகோள் விடுத்தார்.

பிரதமரின் வேண்டுகோளுக்கு போராட்டத்துக்குத் தலைமையேற்றுள்ள சுதெப் தௌக்சுபன் மற்றும் எதிர்க்கட்சிகள் செவிசாய்க்கவில்லை. தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அரசின் செயல்பாடுகளை முடக்கும் வகையில், அரசு அலுவலகங்களைக் கைப்பற்றும் முயற்சியிலும் போராட்டக்காரர்கள் இறங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in