Published : 19 Jun 2016 10:07 AM
Last Updated : 19 Jun 2016 10:07 AM

இந்தோனேசியாவில் ஒரு வாரமாக படகில் பரிதவித்த இலங்கை தமிழர்கள் தரையிறங்க அனுமதி

இந்தோனேசியாவில் கடந்த ஒரு வாரமாக படகில் பரிதவித்த 44 இலங்கைத் தமிழர்கள் தரை யிறங்க அந்த நாட்டு அரசு நேற்று அனுமதி அளித்தது.

கடந்த 11-ம் தேதி இந்தோனே சியாவின் ஆசே பகுதி லோகாங்கா கடல் பகுதியில் ஒரு படகு இன் ஜின் கோளாறு காரணமாக நடுக் கடலில் தத்தளிப்பதை அந்த நாட்டு மீனவர்கள் கண்டுபிடித்தனர். இதுகுறித்து அவர்கள் இந்தோ னேசிய கடற்படைக்கு தகவல் தெரிவித்தனர்.

கடற்படை வீரர்கள் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். படகில் 9 சிறுவர்கள், பெண்கள் உட்பட 44 பேர் இருந் தனர். அவர்களிடம் முறையான ஆவணங்கள் இல்லாததால் இந்தோனேசியாவில் தரையிறங்க கடற்படை வீரர்கள் அனுமதிக்க வில்லை.

ஐ.நா. மனித உரிமை ஆணை யத்தின் தலையீட்டால் ஐந்து நாட்களுக்குப் பிறகு அந்த படகு கரைக்கு கொண்டு வரப்பட்டது. ஆனால் அதன்பிறகும் படகில் இருந்து யாரும் தரையிறங்க அனுமதிக்கப்படவில்லை. அவர் களுக்கு தேவையான உணவு, மருந்துகள் மட்டும் படகுக்கு நேரடியாக விநியோகிக்கப்பட்டன.சில பெண்கள் தரை இறங்கிய போது இந்தோனேசிய வீரர்கள் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டு எச்சரிக்கை செய்தனர். இதைத் தொடர்ந்து அந்தப் பெண்கள் மீண்டும் படகில் ஏற்றப்பட்டனர்.

ஐ.நா. மனித உரிமை ஆணை யம், அம்னஸ்டி இன்டர்நேஷனல் உள்ளிட்ட அமைப்புகளின் நெருக் குதலால் நேற்று தமிழ் அகதிகள் தரையிறங்க அனுமதிக்கப்பட்ட னர். தற்போது அவர்கள் கடற்கரை யில் அமைக்கப்பட்டுள்ள கூடாரங் களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

துணை அதிபர் விளக்கம்

இதுகுறித்து இந்தோனேசிய துணை அதிபர் ஜுசப் கல்லா ஜகார்தாவில் நிருபர்களிடம் கூறியதாவது:

கடந்த 11-ம் தேதி ஆசே பெஹர் கடல் பகுதியில் இலங்கையைச் சேர்ந்த 44 தமிழ் அகதிகள் ஒரு படகில் தத்தளிப்பது தெரிய வந்தது. மனிதாபிமான அடிப் படையில் அவர்களுக்கு உதவி கள் செய்யப்பட்டு வருகின்றன. அகதிகளுக்கு தேவையான உணவு, மருத்துவப் பரிசோதனை கள் நடத்தப்பட்டுள்ளன. பழு தடைந்த படகை சரிசெய்யும் பணி நடைபெறுகிறது.

தமிழ் அகதிகளின் இலக்கு இந்தோனேசியா அல்ல. அவர்கள் ஆஸ்திரேலியாவை நோக்கி சென்று கொண்டிருந்துள்ளனர். இந்தியாவில் இருந்து சுமார் 20 நாட்கள் கடல் பயணத்துக்குப் பிறகு இந்தோனேசிய கடல் எல்லைக்கு அவர்கள் வந்துள்ளனர்.

அவர்கள் விரும்பும்போது இந்தோனேசியாவை விட்டு புறப்படலாம். இந்தோனேசிய கடல் எல்லை வரைக்கும் எங்களது கடற்படை பாதுகாப்பு அளிக்கும். அதன்பிறகு சர்வதேச எல்லைக்குச் சென்றபிறகு அகதிகளுக்கும் எங்களுக்கும் தொடர்பு இல்லை. அவர்கள் விருப்பப்படி செயல் படலாம்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

அம்னஸ்டி இன்டர்நேஷனல் அமைப்பின் தென்கிழக்கு ஆசிய இயக்குநர் ஜோசப் பெனடிக்ட் கூறியதாவது: ஒரு கர்ப்பிணி பெண், 9 சிறுவர்கள் உட்பட 44 பேர் படகில் பயணம் செய்துள்ளனர். அவர்களை அகதிகளாக பதிவு செய்ய வேண்டும் என்று ஐ.நா. மனித உரிமை ஆணையத்திடம் வேண்டுகோள் விடுத்துள்ளோம்.

இலங்கையில் உள்நாட்டுப் போர் முடிவுக்கு வந்தாலும் இன் னமும் இனவாதம் நீடிக்கிறது. அதன்காரணமாகவே அகதிகள் தங்கள் உயிரை பணயம் வைத்து கடல் பயணம் மேற்கொள்கின்றனர்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

ஆஸ்திரேலியா செல்ல விருப்பம்

இந்தோனேசியாவில் கரை ஒதுங்கியுள்ள தமிழ் அகதிகள் மீண்டும் சொந்த நாட்டுக்கு திரும்பி செல்ல வேண்டும் என்று அந்த நாட்டு அரசு அறிவுறுத்தியுள்ளது. ஆனால் தமிழ் அகதிகள் சொந்த நாட்டுக்கு திரும்ப விரும்பவில்லை. அவர்கள் ஆஸ்திரேலியா செல்லவே விரும்புகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x