Published : 20 Apr 2017 10:02 AM
Last Updated : 20 Apr 2017 10:02 AM
சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு, ஐக்கிய நாடுகள் சபை ஜூன் 21-ம் தேதி சிறப்பு தபால் தலை வெளியிடுகிறது.
பிரதமர் மோடியின் வேண்டு கோளை ஏற்று ஜூன் 21-ம் தேதியை சர்வதேச யோகா தினமாக 2015-ல் ஐ.நா. அறிவித்தது.
கடந்த 2015-ம் ஆண்டு முதல் சர்வதேச யோகா தின நிகழ்ச்சியில், அப்போதைய ஐ.நா. பொதுச் செய லாளர் பான் கி மூன், இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ், வாழும் கலை ரவிசங்கர், அமெரிக்க எம்.பி. மற்றும் முக்கிய பிரமுகர்கள் பங் கேற்றனர். இந்நிகழ்ச்சியில் ரவி சங்கர் யோகா நிலைகளை கற்றுத் தர, அவற்றை நூற்றுக்கணக்கான மாணவர்களுடன் சேர்ந்து பான் கி மூன் மற்றும் அவரது மனைவி ஆகியோரும் செய்தனர்.
இந்நிலையில் யோகா தினத்தை முன்னிட்டு இந்த ஆண்டு சிறப்பு தபால் தலை வெளியிட ஐ.நா. திட்டமிட்டுள்ளது.
இதுகுறித்து ஐ.நா.வின் இந்தியாவுக்கான நிரந்தர பிரதிநிதி சயத் அக்பருதீன் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘‘சர்வதேச யோகா தினத்தின் நினைவாக, ஐ.நா. விரைவில் சிறப்பு தபால் தலை வெளியிடுகிறது’’ என்று தெரிவித்துள்ளார். சிறப்பு தபால் தலை வெளியிடும் பணியில் ஐ.நா. தபால் தலை நிர்வாகம் மும்முரமாக ஈடுபட்டுள்ளது.
ஐ.நா. வெளியிட உள்ள தபால் தலைகளில் ‘ஓம்’ என்ற எழுத்தும், யோகாவின் பல்வேறு நிலைகளும் இடம்பெற உள்ளன. இந்த சிறப்பு தபால் தலை நியூயார்க், ஜெனீவா, வியன்னா ஆகிய இடங்களில் உள்ள ஐ.நா. அலுவலகங்களில் வெளியிடப்பட உள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT