Published : 18 Feb 2017 09:52 AM
Last Updated : 18 Feb 2017 09:52 AM

7 முஸ்லிம் நாடுகளின் பயணிகள் வருவதை தடுக்க அடுத்த வாரம் புதிய உத்தரவு: அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் அறிவிப்பு

சிரியா உள்ளிட்ட 7 முஸ்லிம் நாடுகளின் பயணிகள் அமெரிக்கா வருவதற்கு தடை விதிக்கும் வகையில் அடுத்த வாரம் புதிய ஆணை பிறப்பிக்கப்படும் என்று அதிபர் டொனால்டு ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

சிரியா, இராக், ஈரான், லிபியா, ஏமன், சோமாலியா, சூடான் ஆகிய நாடுகளின் அகதிகள், பயணிகள் அமெரிக்காவில் நுழைய தடை விதித்து அதிபர் ட்ரம்ப் கடந்த ஜனவரி 27-ம் தேதி உத்தரவிட்டார். இதனால் வாஷிங்டன், நியூயார்க் உட்பட நாடு முழுவதும் உள்ள விமான நிலையங்களில் பெரும் குழப்பம் ஏற்பட்டது. சுமார் 60 ஆயிரம் விசாக்கள் ரத்து செய்யப்பட்டன.

அதிபரின் உத்தரவை எதிர்த்து பல்வேறு நீதிமன்றங்களில் வழக்குகள் தொடரப்பட்டன. சியாட்டிலில் உள்ள மாவட்ட நீதிமன்றம் அதிபர் ட்ரம்பின் தடையை நீக்கி உத்தரவிட்டது. இதை எதிர்த்து மேல்நீதிமன்றத்தில் அரசு தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் அதிபர் டொனால்டு ட்ரம்ப் வாஷிங்டனில் நேற்று முன்தினம் நிருபர்களிடம் கூறியதாவது: சிரியா உள்ளிட்ட 7 நாடுகளின் பயணிகளுக்கு தடை விதிக்கும் வகையில் அடுத்த வாரம் புதிய ஆணை பிறப்பிக்கப்படும். இந்த ஆணை மிகவும் நேர்த்தியாக வரையறுக்கப்படும்.

எனக்கும் ரஷ்யாவுக்கும் ரகசிய தொடர்புகள் இருப்பதாக ஊடகங்களில் வதந்திகள் பரப் பப்படுகின்றன. இதை வன்மையாக மறுக்கிறேன். ரஷ்யாவுடன் எனக்கு எந்தத் தொடர்பும் இல்லை. அந்த நாட்டைச் சேர்ந்த யாருடனும் நான் தொலைபேசியில் கூட பேசியது கிடையாது.

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுடன் 2 முறை மட்டும் பேசி யுள்ளேன். அதை ஊடகங்களில் பகிரங்கமாக அறிவித்துள்ளேன். அதை தவிர ரஷ்யாவுடன் எனக்கு எவ்வித சம்பந்தமும் இல்லை.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

புதிய தடை உத்தரவு குறித்து அதிபர் மாளிகை வட்டாரங்கள் கூறியபோது, நீதிமன்றத்தால் தடை விதிக்க முடியாத வகையில் புதிய சட்டம் வரையறுக்கப்படும் என்று தெரிவித்தன.

ட்ரம்பின் தடை உத்தரவுக்கு வாஷிங்டன் உள்ளிட்ட பெரும்பாலான மாகாணங்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. எனினும் குடியரசு கட்சி ஆட்சி நடத்தும் டெக்சாஸ் மாகாணம் தடை உத்தரவுக்கு பகிரங்கமாக ஆதரவு தெரிவித்துள்ளது.

அந்த மாகாண தலைமை வழக்கறிஞர் ஜெனரல் கென் பாக்ஸ்டன் கூறியபோது, தீவிரவாத அச்சுறுத்தல்களில் இருந்து அமெரிக்க மக்களைப் பாதுகாக்கவே குறிப்பிட்ட நாடுகளைச் சேர்ந்த பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவை முழுமனதுடன் வர வேற்கிறோம் என்று தெரிவித் துள்ளார்.





FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x