விமானம் கடலில் மூழ்கி 239 பேரும் பலியாகிவிட்டனர்: மலேசிய பிரதமர் அதிகாரபூர்வ அறிவிப்பு

விமானம் கடலில் மூழ்கி  239 பேரும் பலியாகிவிட்டனர்: மலேசிய பிரதமர் அதிகாரபூர்வ அறிவிப்பு
Updated on
1 min read

மாயமான மலேசிய விமானம் தெற்கு இந்திய பெருங்கடலில் மூழ்கி அதில் இருந்த 239 பேரும் பலியாகிவிட்டனர் என்று அந்த நாட்டு பிரதமர் நஜீப் ரசாக் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்.

இதுகுறித்து தலைநகர் கோலாலம்பூரில் திங்கள்கிழமை இரவு அவர் நிருபர்களிடம் கூறியதாவது:

கடந்த 8-ம் தேதி மாயமான எம்.எச்.370 விமானம் தெற்கு இந்திய பெருங்கடலில் விழுந்து மூழ்கி 239 பேரும் பலியாகிவிட்டனர் என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

இங்கிலாந்தின் இன்மர்சாட் செயற்கைக்கோள் நிறுவனம் அளித்த தகவலின் அடிப்படையில் வடக்கு அல்லது தெற்குப் பகுதியில் விமானம் பறந்திருக்கலாம் என்று கணிக்கப்பட்டது. பல்வேறு ஆய்வுகளுக்குப் பின்னர் ஆஸ்திரேலியாவின் பெர்த் நகருக்கு மேற்கே தெற்கு இந்திய பெருங்கடலின் மையப் பகுதியில் விமானம் பறந்திருப்பது உறுதி செய்யப்பட்டது.

அந்தப் பகுதியில் விமானம் தரையிறங்குவதற்கான வாய்ப்பே இல்லை. அங்கேயே விமானம் மூழ்கிவிட்டது. அதில் பயணம் செய்த அனைவரின் குடும்பங்களுக்கும் மலேசிய அரசின் சார்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இதுகுறித்து நிருபர்களிடம் செவ்வாய்க்கிழமை விரிவாக விளக்கம் அளிக்கப்படும். இவ்வாறு நஜீப் கூறினார்.

கடந்த 8-ம் தேதி அதிகாலை 12.41 மணிக்கு மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து சீனத் தலைநகர் பெய்ஜிங்குக்கு 227 பயணிகள், 12 ஊழியர்களுடன் புறப்பட்ட மலேசிய ஏர்லைன்ஸ் விமானம் 1.20 மணிக்கு ரேடாரில் இருந்து மறைந்தது.

கடந்த 17 நாட்கள் நடந்த தேடுதல் பணிக்குப் பின்னர் விமானம் கடலில் மூழ்கிவிட்டதாக மலேசிய பிரதமர் அதிகாரபூர்வமாக அறிவித் துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in