Published : 07 Mar 2014 11:41 AM
Last Updated : 07 Mar 2014 11:41 AM

ரஷ்யாவுடன் இணைய உக்ரைனின் கிரிமியா விருப்பம்

ரஷ்ய கூட்டமைப்புடன் இணைய உக்ரைனின் கிரிமியா விருப்பம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக மக்களின் கருத்தை அறிய வரும் மார்ச் 16-ம் தேதி பொது வாக்கெடுப்பு நடத்தப்படும் எனத் தெரிகிறது.

18-ம் நூற்றாண்டு முதல் ரஷ்யாவின் ஒரு பகுதியாக கிரிமியா இருந்து வந்தது. 1954-ம் ஆண்டு அப்போதைய சோவியத் யூனியனின் தலைவர் குருசேவ், கிரிமியாவை உக்ரைனுக்கு பரிசாக அளித்தார். இந்த இரு பகுதிகளுமே, அப்போது சோவியத் யூனியனில் இணைந்திருந்தன. இப்போது உக்ரைனின் தன்னாட்சி பகுதியாக கிரிமியா இருந்து வருகிறது. அப்பகுதிக்கென நாடாளுமன்றம் உள்ளது.

ரஷ்யாவுக்கு ஆதரவான உக்ரைன் அதிபர் விக்டர் யானுகோவிச்சுக்கு எதிர்ப்பு அதிகரித்ததைத் தொடர்ந்து, அவர் நாட்டை விட்டு வெளியேறினார். இதையடுத்து, உக்ரைனின் கிரிமியாவுக்குள் ரஷ்ய படையினர் புகுந்தனர். அதன் பெரும்பகுதி தற்போது ரஷ்யாவின் கட்டுப்பாட்டில் உள்ளது.

இந்நிலையில், கிரிமியா நாடாளுமன்றக் கூட்டத்தில் ரஷ்ய கூட்டமைப்புடன் இணைவதற்கு விருப்பம் தெரிவிக்கப்பட்டுள்ளது. மொத்தமுள்ள 86 மக்கள் பிரதிநிதிகளில் 78 பேர் இத்தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களித்தனர். இந்த கோரிக்கையை ரஷ்யா பரிசீலிக்க வேண்டும் என்று கிரிமியா நாடாளுமன்றம் கோரிக்கை விடுத்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x