தேவயானி மனுவை நிராகரித்தது அமெரிக்க நீதிமன்றம்

தேவயானி மனுவை நிராகரித்தது அமெரிக்க நீதிமன்றம்
Updated on
1 min read

இந்திய துணைத் தூதர் தேவயானி கோப்ரகடே தன் மீது குற்றச்சாட்டு பதிவு செய்வதற்கான காலக்கெடுவை நீட்டிக்கக் கோரி தாக்கல் செய்த மனுவை ஏற்க அமெரிக்க நீதிமன்றம் மறுத்து விட்டது.

விசா மோசடி வழக்கில் குற்றச் சாட்டு பதிவு செய்வதற்கான காலக்கெடுவை மேலும் ஒரு மாதத்துக்கு தள்ளிவைக்க வேண்டும் என இந்திய துணைத் தூதர் தேவயானி கோப்ரகடே சார்பில் அமெரிக்க நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்படது.

இதற்கு அந்த நாட்டு அரசு தரப்பு வழக்கறிஞர் பிரீத் பகாரா கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், தேவயானியின் இந்த கோரிக்கையை அமெரிக்க நீதிமன்றம் நிராகரித்துள்ளது. நீதிபதி சாரா நெட்பர்ன், தேவயானி கோரிக்கையை ஏற்க முடியாது என தெரிவித்தார்.

மேலும், அமெரிக்க சட்ட நடைமுறைகளின்படி வழக்குப் பதிவு செய்யப்பட்டு ஒரு மாதத்துக்குள் நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட வேண்டும் என்பதையும் சுட்டிக் காட்டினார்.

இதனால் ஜனவரி 13-ஆம் தேதிக்கு பின் தேவயானி மீது அமெரிக்க நீதிமன்ற நடவடிக்கைகள் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையில், தேவயானியின் வழக்கறிஞர் டேனியல் அர்ஷேக், அமெரிக்க நீதிமன்றம் கோரிக்கை மனுவை நிராகரித்து விட்டதால் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து தீவிரமாக யோசித்து வருகிறோம் என தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in