

பல்வேறு அளவிலான பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதால், இந்திய மீனவர்கள் தொடர்பான பிரச்சினைக்கு தீர்வு எட்டப்படும் என இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்க நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
எதிர்க்கட்சி கொறடா அனுரா குமார திசநாயகே, “இந்திய மீனவர்களை வாரத்துக்கு குறிப்பிட்ட அளவு நாட்கள் மட்டும் அனுமதிப்பது அல்லது, வட கிழக்கு கடல் பகுதியில் தடை செய்யப்பட்ட பகுதியில் அனுமதிப்பது போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றனவா” என பிரதமரிடம் கேள்வியெழுப்பினார்.
அதற்கு பதிலளித்த பிரதமர் ரணில் விக்ரமசிங்க, “சுமார் ஆயிரம் இந்திய மீனவர்கள், மீன் வளத்துக்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் தரை ஆழ இழுவை முறையில் இலங்கைக் கடல் பகுதியில் சட்ட விரோதமாக மீன்பிடிக்கின்றனர். இப்பிரச்சினைக்குத் தீர்வு காண பல்வேறு வழிமுறைகளை ஆய்ந்துள்ளோம். குறிப்பாக, தரை வரை இழுவை வலைகளைப் பயன்படுத்துவதற்கு முற்றுப் புள்ளி வைக்கப்படும். நமது மீன் வளத்தை பாதிக்கச் செய் வதை அனுமதிக்க முடியாது. தற்போது 130-140 படகுகள் நம் வசம் உள்ளன. நாம் மீனவர்களை விடுவிப் போம், படகுகளை விடுவிக்க முடியாது.
இப்பிரச்சினைக்கு தீர்வு காண்பது குறித்து வடக்குப்பகுதி மீனவர்களிடம் கருத்து கேட்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
சுஷ்மாவுடன் சந்திப்பு
இலங்கை மேம்பாட்டு உத்தி மற்றும் சர்வதேச வர்த்தகத் துறை அமைச்சர் மாலிக் சமர விக்ரமா இந்தியாவில் இரண்டு நாள் சுற்றுப் பயணம் மேற்கொண்டிருந்தார். அப்போது அவர் இந்திய வெளி யுறவு அமைச்சர் சுஷ்மா ஸ்வரா ஜைச் சந்தித்தார். இந்த சந்திப்பின் போது மீனவர் பிரச்சினை தொடர்பாக விவாதிக்கப்பட்டது.
2016 பிப்ரவரியில் கூட்டுக் குழு கூட்டத்தில் பரிந்துரைத்தபடி மீனவர் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காண வேண்டும் என சுஷ்மா ஸ்வராஜ் வலியுறுத்தியுள்ளார். இதைத்தொடர்ந்து விரைவிலேயே இரு நாட்டு மீனவர் நலத் துறை அமைச்சர்கள் அளவிலான பேச்சுவார்த்தைக்கு இரு நாடுகளும் ஒப்புக் கொண்டுள்ளன.
இதுதவிர, இலங்கையில் சம்பூர் மின் திட்டம், பல்லாலே விமான தளம், காங்கேசன்துறை துறைமுகம் உட்பட இந்தியர்கள் பல்வேறு திட்டங்களில் முதலீடு செய்வது குறித்தும் இருவரும் விவாதித்ததாக தக வல்கள் வெளியாகியுள்ளன.