Last Updated : 22 Jun, 2016 02:35 PM

 

Published : 22 Jun 2016 02:35 PM
Last Updated : 22 Jun 2016 02:35 PM

இலங்கை அகதிகளுக்கு உதவ சர்வதேச அமைப்புகளுக்கு இந்தோனேஷியா அனுமதி

இந்தோனேஷியாவில் தற்காலிகமாக தங்கவைக்கப்பட்டுள்ள இலங்கை அகதிகள் 44 பேருக்கும் சர்வதேச தொண்டு நிறுவனங்கள் உதவ அந்நாட்டு அரசு அனுமதியளித்துள்ளது.

கடற்கரையில் அமைக்கப்பட்டுள்ள கூடாரங்களில் தங்க வைக்கப்பட்டுள்ள அகதிகளுக்கு சர்வதேச தொண்டு நிறுவனங்கள் உதவி செய்து வருகின்றன.

இருப்பினும், மோசமான வானிலை காரணமாகவே படகு தற்காலிகமாக அனுமதிக்கப்பட்டு அகதிகள் தரையிறக்கப்பட்டு தங்க வைக்கப்பட்டுள்ளனர். மழை நின்று வானிலை சரியானதும் அகதிகள் வந்த படகை சர்வதேச கடல் எல்லையில் விட்டுவிடுவோம் என இந்தோனேஷிய அரசு தெரிவித்துள்ளது.

கடந்த 11-ம் தேதி இந்தோனேஷியாவின் ஆசே பகுதி லோகாங்கா கடல் பகுதியில் ஒரு படகு இன்ஜின் கோளாறு காரணமாக நடுக்கடலில் தத்தளிப்பதை அந்த நாட்டு மீனவர்கள் கண்டுபிடித்தனர். இதுகுறித்து அவர்கள் இந்தோனேஷிய கடற்படைக்கு தகவல் தெரிவித்தனர்.

கடற்படை வீரர்கள் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். படகில் 9 சிறுவர்கள், பெண்கள் உட்பட 44 பேர் இருந்தனர். அவர்களிடம் முறையான ஆவணங்கள் இல்லாததால் இந்தோனேஷியாவில் தரையிறங்க கடற்படை வீரர்கள் அனுமதிக்கவில்லை.

ஐ.நா. மனித உரிமை ஆணையத்தின் தலையீட்டால் ஐந்து நாட்களுக்குப் பிறகு அந்த படகு கரைக்குக் கொண்டு வரப்பட்டது. ஆனால் அதன்பிறகும் படகில் இருந்து யாரும் தரையிறங்க அனுமதிக்கப்படவில்லை. அவர்களுக்கு தேவையான உணவு, மருந்துகள் மட்டும் படகுக்கு நேரடியாக விநியோகிக்கப்பட்டன.சில பெண்கள் தரை இறங்கிய போது இந்தோனேஷிய வீரர்கள் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டு எச்சரிக்கை செய்தனர். இதைத் தொடர்ந்து அந்தப் பெண்கள் மீண்டும் படகில் ஏற்றப்பட்டனர்.

ஐ.நா. மனித உரிமை ஆணையம், அம்னஸ்டி இன்டர்நேஷனல் உள்ளிட்ட அமைப்புகளின் நெருக்குதலால் சனிக்கிழமை தமிழ் அகதிகள் தரையிறங்க அனுமதிக்கப்பட்டனர். தற்போது அவர்கள் கடற்கரையில் அமைக்கப்பட்டுள்ள கூடாரங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x