Last Updated : 29 Oct, 2014 11:12 AM

 

Published : 29 Oct 2014 11:12 AM
Last Updated : 29 Oct 2014 11:12 AM

கருப்புப் பண விவகாரம்: இந்தியா - சுவிட்சர்லாந்து இடையே கருத்து வேறுபாடு - மூத்த அதிகாரி தகவல்

கருப்புப் பண விவகாரத்தில் இந்தியா, சுவிட்சர்லாந்து இடையே கருத்து வேறுபாடுகள் நிலவுவது உண்மைதான் என்று சுவிட்சர்லாந்து வெளியுறவுத் துறை மூத்த அதிகாரி வாலன்டைன் ஜெல்வேகர் தெரிவித்துள்ளார்.

இந்திய தொழிலதிபர்கள், அரசியல்வாதிகள் பலர் சுவிட்சர்லாந்து வங்கிகளில் கருப்புப் பணத்தை பெருமளவில் பதுக்கி வைத்திருப்பதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. அந்தப் பணத்தை மீட்க இந்திய அரசு சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

இதன் ஒருபகுதியாக வெளிநாட்டில் கருப்புப் பணத்தை பதுக்கி வைத்துள்ள 3 தொழிலதிபர்களின் பெயர்களை இந்திய அரசு நேற்று வெளியிட்டது. அவர்கள் மீது வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன. மேலும் பலரின் பெயர்கள் விரைவில் வெளியிடப்படும் என்று தெரிகிறது. இந்த விவகாரம் தொடர்பாக அமெரிக்காவில் தற்போது சுற்றுப் பயணம் மேற்கொண்டிருக்கும் சுவிட்சர்லாந்து வெளியுறவுத் துறையின் மூத்த அதிகாரி வாலன்டைன் ஜெல்வேகர் கூறியதாவது:

கருப்புப் பண விவகாரத்தில் இந்தியாவுக்கும் சுவிட்சர்லாந்துக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் நிலவுவது உண்மைதான். சுவிட்சர்லாந்தை பொறுத்தவரை வரிஏய்ப்பு கிரிமினல் குற்றம் அல்ல. ‘உங்கள் வாடிக்கையாளரை அறிந்து கொள்ளுங்கள்’ நடைமுறை விதிகளை சுவிட்சர்லாந்து வங்கிகள் கண்டிப்புடன் பின்பற்றுகின்றன. எனவே வரிஏய்ப்பு தொடர்பாக சுவிட்சர்லாந்தை அணுகும்போது நாங்கள் வாடிக்கையாளர்களின் விவரங்களை விரைவாக அளிக்கிறோம்.

பல்வேறு நாடுகள் சுவிட்சர்லாந்து வங்கிகளின் வாடிக்கையாளர்கள் குறித்த விவரங்களை கோரும்போது நாங்கள் ஒத்துழைப்பு அளித்து வருகிறோம். துனிசியா, நைஜீரியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் கோரிக்கைகளை ஏற்று விரைவாக செயல்பட்டிருக்கிறோம்.

கருப்புப் பண விவகாரம் தொடர்பாக இந்திய அரசுடன் மிக நீண்டகாலமாக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. இரு நாடுகளுக்கும் இடையே நிலவும் கருத்து வேறுபாடுகள் விரைவில் களையப்படும் என்று அவர் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x