கத்தாருடனான ராஜாங்க உறவைத் துண்டிப்பதாக சவுதி அரேபியா, பஹ்ரைன், எகிப்து, ஐக்கிய அரபு அமீரகம் அறிவிப்பு

கத்தாருடனான ராஜாங்க உறவைத் துண்டிப்பதாக சவுதி அரேபியா, பஹ்ரைன், எகிப்து, ஐக்கிய அரபு அமீரகம் அறிவிப்பு
Updated on
1 min read

இஸ்லாமியக் குழுக்களுக்கு ஆதரவு தெரிவிப்பதால் கத்தாருடனான தங்கள் ராஜாங்க உறவுகளைத் துண்டித்துக் கொள்வதாக சவுதி அரேபியா, பஹ்ரைன், எகிப்து, ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய 4 அரபு நாடுகளும் அறிவித்துள்ளன.

வளைகுடா நாடான கத்தார் இஸ்லாமியக் குழுக்களுக்கு ஆதரவளித்து தீவிரவாதத்தை வளர்ப்பதாகக் கூறி இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அவை தெரிவித்துள்ளன.

ஏமனில் நடந்துவரும் போரில் இருந்து கத்தார் படைகள் விடுவிக்கப்படும் என்று சவுதி அரேபியா அறிவித்துள்ளது.

ஆகாய, கடல் வழிப் பயணங்கள் என்னவாகும்?

அனைத்து நாடுகளும் கத்தாருடனான ஆகாய மற்றும் கடல் வழி மார்க்கப் பயணத்தை நிறுத்தத் திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த முடிவு கத்தார் ஏர்வேய்ஸ் நிறுவனத்தை எந்த அளவுக்கு பாதிக்கும் என்று தெரியவில்லை.

அரபு நாடுகளின் முடிவு குறித்துக் கருத்துச் சொல்ல கத்தார் அதிகாரிகள் மறுத்துவிட்டனர்.

பஹ்ரைன் விளக்கம்

இதுபற்றி விளக்கமளித்துள்ள பஹ்ரைன், ''ஆயுதம் தாங்கிய தீவிரவாதிகளின் செயல்பாடுகளுக்கு ஆதரவளித்தும், நிதியுதவி செய்தும் கத்தார் தீவிரவாதத்தை வளர்த்து வருகிறது. பஹ்ரைனில் குழப்பத்தை ஏற்படுத்தவும், நாசவேலைகளை மேற்கொள்ளவும் ஈரானியக் குழுக்களுக்கு கத்தார் நிதியுதவி அளிக்கிறது'' என்று குற்றம் சாட்டியுள்ளது.

எடிஹாட் ஏர்லைன்ஸ் சேவை ரத்து:

இதற்கிடையில் அபுதாபி அரசின் எடிஹாட் விமான நிறுவனம் கத்தார் நாட்டுக்கான சேவையைத் துண்டித்துள்ளது. செவ்வாய்க்கிழமை காலை முதல் அபுதாபியில் இருந்து கத்தார் தலைநகர் தோஹாவுக்குச் செல்லும் அனைத்து விமான சேவைகளும் நிறுத்தப்படும் என அபுதாபி அரசு அறிவித்துள்ளது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in