2027 பிரிக்ஸ் மாநாடு சீனாவில் நடைபெறுகிறது

2027 பிரிக்ஸ் மாநாடு சீனாவில் நடைபெறுகிறது
Updated on
1 min read

புதுடெல்லி: பிரிக்ஸ் உச்சி மாநாட்டின் முதல் நாள் கூட்டத்தில் 45 பக்க கூட்டுப் பிரகடனம் நிறைவேற்றப்பட்டது. தீவிரவாதத்துக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். ஒருதலைப்பட்சமான வரி விதிப்புகளைத் தவிர்க்க வேண்டும். அணு ஆயுத பதற்றத்தைத் தணிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் கூட்டுப் பிரகடனத்தில் இடம்பெற்றன. இந்தப் பிரகடனத்துக்கு மாநாட்டின் கடைசி நாளான நேற்று ஒப்புதல் வழங்கப்பட்டது.

2027-ம் ஆண்டுக்கான பிரிக்ஸ் தலைமைப் பொறுப்பை சீனா ஏற்க உள்ளது. கடைசி நாள் மாநாட்டில், 2027-ம் ஆண்டு பிரிக்ஸ் தலைமைப் பொறுப்பு சீனாவிடம் ஒப்படைக்கப்பட்டது. அதன்படி அடுத்த ஆண்டு பிரிக்ஸ் மாநாடு சீனாவில் நடைபெறுகிறது. இதுகுறித்து பிரதமர் மோடி கூறும்போது, “அடுத்த ஆண்டு பிரிக்ஸ் மாநாட்டை சீனா நடத்த உள்ளது. இதற்காக சீன அதிபர் ஜி ஜின்பிங்குக்கு வாழ்த்துகளைத் தெரிவிக்கிறேன். டெல்லி பிரிக்ஸ் மாநாட்டில் சீன அதிபர் கலந்து கொண்டதற்காக நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்" என்றார்.

புதிய நாடுகளைச் சேர்க்க முயற்சி: சீன அரசு ஊடகமான குளோபல் டைம்ஸ் வெளியிட்ட தலையங்கக் கட்டுரையில் கூறியிருப்பதாவது: பிரிக்ஸ் கூட்டமைப்பில் புதிய உறுப்பினர்களைச் சேர்க்க சீன அதிபர் ஜி ஜின்பிங் விரும்புகிறார். இதற்காகப் பிரிக்ஸ் பிளஸ் திட்டத்தைக் கடந்த 2013-ம் ஆண்டிலேயே அவர் முன்மொழிந்தார். தற்போது பிரிக்ஸ் கூட்டமைப்பின் நட்பு நாடுகளாக இருக்கும் 10 நாடுகள் கூட்டமைப்பில் இணைய விருப்பம் தெரிவித்துள்ளன.

இராக், மடகாஸ்கர் உள்ளிட்ட பல்வேறு நாடுகளும் கூட்டமைப்பில் இணைய விரும்புகின்றன. இந்த மாநாட்டில் ‘கிரேட்டர் பிரிக்ஸ்’ உருவாக்க முடிவு எடுக்கப்பட்டு உள்ளது. இவ்வாறு குளோபல் டைம்ஸ் தலையங்கத்தில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. சீன ஆதரவுடன் பிரிக்ஸ் கூட்டமைப்பில் இணைய பாகிஸ்தான் முயற்சிக்கிறது.

ஆனால் இந்தியாவின் எதிர்ப்பால் அந்த நாடு கூட்டமைப்பில் சேர்க்கப்படவில்லை. டெல்லி மாநாட்டில் பஹல்காம் தீவிரவாத தாக்குதலுக்குக் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. அதோடு தீவிரவாதத்துக்கு ஆதரவு அளிக்கும் நாடுகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க கூட்டுப் பிரகடனத்தில் வலியுறுத்தப்பட்டு உள்ளது. இது பாகிஸ்தானுக்கு எதிரான நடவடிக்கை என்று சர்வதேச அரசியல் நோக்கர்கள் தெரிவித்துள்ளனர்.

2027 பிரிக்ஸ் மாநாடு சீனாவில் நடைபெறுகிறது
“தேசிய அளவில் வளர்ந்த விசிகவை பார்த்து சிலருக்கு பொறாமை” - திருமாவளவன் வருத்தம்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in