

உலகளாவிய நுண்ணறிவுத் திறன் போட்டியில் இந்திய வம்சாவளி சிறுமி ராஜ்கவுரி பவார் (12) புதிய சாதனை படைத்துள்ளார்.
பிரிட்டனின் கிழக்குப் பகுதியில் உள்ள கேதோர்பி நகரை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் மென்ஸா அமைப்பில் உலகம் முழுவதும் ஒரு லட்சத்து 21 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உறுப்பினர்களாக உள்ளனர்.
மென்ஸா அமைப்பு சார்பில் நுண்ணறிவு திறன் போட்டி நடத்தப்படுகிறது. இதில் மொழித் திறன், பொது அறிவு, நினைவுத் திறன், கணிதத் திறன், சிக்கலுக்கு தீர்வு காணும் திறன் ஆகியவற்றின் அடிப்படையில் கேள்விகள் கேட்கப்படும். இந்தத் தேர்வில் வெற்றி பெற்று குறைந்தது 98 மதிப்பெண்கள் பெறுபவர்கள் மென்ஸா அமைப்பில் உறுப்பினர்களாகச் சேர்க்கப்படுவர்.
உலகின் தலை சிறந்த விஞ்ஞானிகள் ஆல்பர்ட் ஜன்ஸ்டின், ஸ்டீபன் ஹாக்கிங் உள்ளிட்டோர் மென்ஸா நுண்ணறிவுத் திறன் போட்டியில் 160 மதிப்பெண்கள் பெற்றனர்.
இந்நிலையில் கடந்த மாதம் நடந்த மென்ஸா தேர்வில் பிரிட்டனைச் சேர்ந்த இந்திய வம்சாவளி சிறுமி ராஜ்கவுரி பவார் 162 மதிப்பெண்கள் பெற்று புதிய சாதனை படைத்துள்ளார். ஜன்ஸ்டினைவிட அவர் கூடுதலாக 2 மதிப்பெண்கள் பெற்றிருக்கிறார்.