தாய்லாந்தில் அரசுக்கு எதிராக போராட்டம்

தாய்லாந்தில் அரசுக்கு எதிராக போராட்டம்
Updated on
1 min read

தாய்லாந்தில் அரசுக்கு எதிராக தலைநகர் பாங்காக்கில் திங்கள்கிழமை போராட்டம் நடைபெற்றது. இந்தப் போராட்டத்தின்போது, பிரதமர் இங்லக் ஷினவத்ரா தலைமையிலான அரசு பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.

சனம் லுவாங் பகுதியில் உள்ள ஜனநாயக நினைவுச் சின்னம் அருகிலிருந்து காலை 8.30 மணியளவில் புறப்பட்ட ஆயிரக்கணக்கான போராட்டக்காரர்கள், 13 அரசு அலுவலகங்கள் மற்றும் தொலைக்காட்சி நிலையம் ஆகியவற்றை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்தப் போராட்டத்துக்கு எதிர்க் கட்சியான ஜனநாயகக் கட்சியும் அதன் தோழமைக் கட்சிகளும் ஆதரவு அளித்தன. இந்தப் பேரணியின்போது, பியூ தாய் கட்சி தலைமையிலான கூட்டணி அரசு பதவி விலக வேண்டும் என்று கோஷங்கள் எழுப்பப்பட்டன.

நாடாளுமன்றம் உள்ளிட்ட முக்கிய அலுவலகங்களுக்கு சீல் வைக்கவும் போராட்டக்காரர்கள் திட்டமிட்டுள்ளனர். இதுபோன்ற முயற்சியைத் தடுப்பதற்கு பாதுகாப்பை பலப்படுத்துமாறு பாதுகாப்பு படையினருக்கு அரசு உத்தரவிட்டுள்ளது. ஒரு வேளை நாடாளுமன்றத்துக்கு சீல் வைக்கப்பட்டால், அது கலைக்கப்படலாம் என கூறப்படுகிறது.

திங்கள்கிழமை மதிய நிலவரப்படி சுமார் 4.4 லட்சம் பேர் போராட்டத்தில் பங்கேற்றதாகவும் இது மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.

முன்னாள் பிரதமரும், இங்லக் ஷினவத்ராவின் சகோதரருமான தக்ஷின் ஷினவத்ரா கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு ராணுவ ஆட்சிக் கவிழ்ப்பினால் பதவி விலகினார். அப்போதிலிருந்தே அங்கு அரசியல் குழப்பம் நிலவி வருகிறது.

இந்நிலையில், நாடாளுமன்றத்தில் சர்ச்சைக்குரிய மன்னிப்பு மசோதாவைக் கொண்டு வந்தார் ஷினவத்ரா. இது கீழவையில் நிறைவேற்றப்பட்ட போதிலும், மேலவையில் நிராகரிக்கப்பட்டது.

இந்த மசோதா, தன் மீதான வழக்குகளிலிருந்து தப்பிப்பதற் காக பதவி விலகியதிலிருந்து வெளிநாட்டில் வசித்து வரும் அவரது சகோதரர் தக்ஷின் நாடு திரும்ப வழிவகுக்கும் என கருதப்படுகிறது. எனவே, கடந்த ஒரு வாரமாக அரசுக்கு எதிராக போராட்டம் நடைபெற்று வருகிறது. இது திங்கள்கிழமை தீவிரமடைந்தது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in