Published : 27 Sep 2013 11:57 AM
Last Updated : 27 Sep 2013 11:57 AM

அமெரிக்காவில் சல்மான் குர்ஷித் - அமைச்சர் ஜான் கெர்ரியுடன் சந்திப்பு

அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ஜான் கெர்ரியை இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சல்மான் குர்ஷித், நியூயார்க்கில் புதன்கிழமை சந்தித்துப் பேசினார்.

இந்தியா-அமெரிக்கா இடையிலான பொருளாதார உறவை மேம்படுத்துவது குறித்து இந்தச் சந்திப்பில் விரிவாக விவாதிக்கப்பட்டது.

மேலும், எச்1-பி விசா, அணுசக்தி ஒப்பந்தம், வரிவிதிப்பு, விமான- தொலைத்தொடர்புத் துறையில் அன்னிய முதலீட்டு வரம்பு, ராணுவ ஒத்துழைப்பு, பருவநிலை மாற்றம், சிரியா பிரச்னை உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்தும் இருவரும் ஆலோசித்தனர்.

எச்1- பி விசா: அமெரிக்காவில் நிரந்தரக் குடியுரிமை இன்றி தாற்காலிகமாகப் பணியாற்றும் வெளிநாட்டினருக்கு எச்1-பி விசா வழங்கப்படுகிறது. இதில் பல்வேறு கட்டுப்பாடுகளை அந்த நாட்டு அரசு விதித்துள்ளது. இதனை தளர்த்துமாறு இந்திய தரப்பில் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது. இந்த விவகாரம் இருநாட்டு அமைச்சர்களின் பேச்சில் முக்கியமாக விவாதிக்கப்பட்டது.

இதுகுறித்து, செய்தியாளர்களிடம் பேசிய குர்ஷித், எச்1-பி விசா குறித்து இந்தியாவின் நிலைப்பாட்டை எடுத்துரைத்துள்ளோம், இதில் சுமுக தீர்வை எட்ட இருதரப்பும் முனைப்புடன் செயல்படுகின்றன.அமெரிக்க தரப்பில் இருந்து சாதகமான பதில்கள் கிடைத்துள்ளன என்றார்.

அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ஜான் கெர்ரி கூறும்போது, இருதரப்பு வர்த்தகத்தை அதிகரிப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது. சீர்திருத்தங்களை இந்தியா முழுமையாக ஏற்றுக் கொண்டால் அந்த நாட்டின் பொருளாதாரம் வேகமாக வளர்ச்சியடையும் என்றார்.

பாலஸ்தீனம், எகிப்து, லிபியா, சீனா ஆகிய நாடுகளின் வெளியுறவுத் துறை அமைச்சர்களுடனும் சல்மான் குர்ஷித் பேச்சுவார்த்தை நடத்தினார். சார்க் வெளியுறவுத் துறை அமைச்சர்களின் மாநாட்டிலும் அவர் பங்கேற்றார்.

சீன அமைச்சருடனான சந்திப்பின்போது, பிரதமர் மன்மோகன் சிங்கின் சீனப் பயணம் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x