நிலவு தோன்றியது எப்படி?: ஆய்வில் ருசிகரம்

நிலவு தோன்றியது எப்படி?: ஆய்வில் ருசிகரம்
Updated on
1 min read

பிரபஞ்சத்தில் பூமி தோன்றிய புதிதில் ஒரு கிரகத்தின் அளவு கொண்ட ஒரு பொருள் பூமியின் மீது மோதியதில் நிலவு உருவானதாக வானியல் ஆராய்ச்சியாளர்கள் நடத்திய புதிய ஆய்வில் தெரியவந்துள்ளது.

பூமி தோன்றிய புதிதில் 450 கோடி ஆண்டுகளுக்கு முன், வேறு ஒரு கிரகம் பூமியின் மீது பயங்கரமாக மோதியது என்றும், அப்போது சிதறிய பொருட்கள் விண்வெளியில் ஒன்றிணைந்து நிலவாக உருவானது என்றும் விஞ்ஞானிகள் சில ஆண்டுகளுக்கு முன் கண்டுபிடித்தனர். ஆனால் அதற்கான ஆதாரம் கிடைக்காமல் இருந்தது.

இந்நிலையில் அமெரிக்க விண்வெளி வீரர்கள் நிலவுக்கு சென்றபோது அங்கிருந்து தோண்டி எடுத்து வந்த பாறை படிமங்களையும், பூமியின் தரைமட்டத்துக்கு கீழே 2,900 கி.மீ ஆழத்தில் இருந்து எடுக்கப்பட்ட படிமங்களையும் வானியல் ஆராய்ச்சியாளர்கள் ஆராய்ந்து பார்த்தனர். இதில் பூமியில் இருக்கும் இரும்பு, பிராணவாயு போன்ற கலவைகள், நிலவின் பாறைகளிலும் இருப்பது தெரியவந்தது.

இதைத் தொடர்ந்து வேறு ஒரு கிரகத்தின் மோதலால் சிதறிய பொருட்களில் இருந்து நிலவு தோன்றி யது என்ற கோட்பாடு ஓரளவுக்கு பொருந்துவதாக தெரியவந்துள்ளது. அதே சமயம் மோதல் நிகழ்வினால் தான் நிலவு உருவானதற்கான உறுதியான ஆதாரங்கள் இதுவரை கிடைக்கவில்லை என வானியல் ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

திரவ பொருட்களை மோத வைத்து மேற்கொண்ட ஆராய்ச்சியில் கிடைத்த முடிவை கொண்டு, இளம் பூமியில் வேறு ஒரு கிரகம் மோதி நிலவு உண்டானது என்பதை தோராயமாகவே கண்டுபிடித்திருப்பதாக ஆராய்ச்சி யாளர்கள் தெரிவிக்கின்றனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in