Published : 14 Mar 2014 09:09 AM
Last Updated : 14 Mar 2014 09:09 AM

மாயமான மலேசிய விமானம்: தேடுதல் பணியில் இந்தியா

நடுவானில் மாயமான மலேசிய விமானத்தை தேடும் பணி 6-வது நாளாக வியாழக்கிழமையும் தொடர்ந்தது.

சீன விண்வெளி ஆய்வுத் துறை விஞ்ஞானிகள் தற்புோது 10 செயற்கைக்கோள்கள் மூலம் விமானத்தை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். அதில் குறிப்பிட்ட மூன்று கடல் பகுதிகளில் சில பொருள்கள் மிதப்பது தெரியவந்தது.

அந்த இடங்களுக்கு மலேசிய விமானங்களும் கப்பல்களும் அனுப்பப்பட்டன. பல மணி நேர தேடுதலுக்குப் பின்னரும் அப் பகுதிகளில் எந்தத் தடயமும் கிடைக்கவில்லை.

வியட்நாமின் கிழக்கு, மேற்கு கடல் பகுதிகளிலும் மலாகா ஜலசந்தி, அந்தமான் கடல் பகுதி என சுற்றுவட்டார பகுதி முழுவதும் தற்போது தீவிரமாக தேடுதல் பணி நடைபெறுகிறது.

சீன பிரதமர் லீ கெஹியாங் நிருபர்களிடம் கூறியதாவது:மாயமான விமானம் குறித்த தகவலுக்காக மிகுந்த எதிர்பார்ப்போடு காத்திருக்கிறோம். அந்த விமானத்தை கண்டுபிடிக்கும் வரை ஓயமாட்டோம். எக்காரணத்தைக் கொண்டும் தேடுதல் பணியை கைவிடவே மாட்டோம். இந்தச் சம்பவத்தால் வெளிநாடுகளுக்குச் சுற்றுலா செல்லும் சீனப் பயணிகளுக்கு கட்டுப்பாடு எதுவும் விதிக்கப்படாது என்று அவர் தெரிவித்தார்.

இதனிடையே நடுவானில் மலேசிய விமானம் வெடித்துச் சிதறியதா என்பது குறித்து அமெரிக்க உளவு செயற்கைக்கோள்களின் அன்றாட பதிவுகளில் ஆய்வு செய்யப்பட்டது. ஆனால் அதிலும் எந்தத் தடயமும் கிடைக்கவில்லை.

இதுகுறித்து அமெரிக்க அதிகாரிகள் கூறியபோது, செயற்கைக்கோள் மூலம் விமானம் குறித்து எந்தத் தகவலும் கிடைக்கவில்லை. எனினும் மற்ற நாடுகளோடு இணைந்து அமெரிக்க விமானங்களும் கப்பல்களும் தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளன என்று தெரிவித்தனர்.

விமானம் ரேடாரில் இருந்து மறைந்தபோது எந்த இடத்தில் பறந்ததோ அந்தப் பகுதியில் ஆயிரம் கடல் மைல் தொலைவுக்கு முதல் தேடுதல் பணி நடைபெற்றது. கடந்த 6 நாள்களில் படிப்படியாக எல்லை விரிவுபடுத்தப்பட்டு தற்போது 27,000 கடல்மைல் தொலைவுக்கு தேடும் பணி நடைபெற்று வருகிறது.

43 போர்க்கப்பல்களும் 40 போர் விமானங்களும் தென் சீனக் கடல், மலாகா ஜலசந்தி பகுதிகளில் 24 மணி நேரமும் தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளன.

தேடுதலில் இந்தியாவும் இணைந்தது

மலேசிய விமானத்தை தேடும் பணியில் இந்தியாவும் இணைந்துள்ளது. இதன் இந்திய விமானப் படையைச் சேர்ந்த 4 விமானங்கள் அந்தமான் கடலில் தேடுதல் பணியைத் தொடங்கியுள்ளன.

மேலும் இந்திய கடற்படை மற்றும் கடலோரக் காவல் படையைச் சேர்ந்த 3 போர்க் கப்பல்களும் அந்தமான் கடலில் சுமார் 35,000 சதுர கி.மீட்டர் தொலைவுக்கு விமானத்தைத் தேடி வருகின்றன. இவை தவிர தாய்லாந்து கடலில் முகாமிட்டுள்ள இந்தியாவின் சாகர் போர்க்கப்பலும் விரைவில் தேடுதல் பணியில் இணைய உள்ளது.

மேலும் இந்தியாவின் உளவு செயற்கைக்கோளான ருக்மணி மூலமும் விமானத்தை தேடும் பணி தொடங்கியுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x