Last Updated : 14 Oct, 2014 12:29 PM

 

Published : 14 Oct 2014 12:29 PM
Last Updated : 14 Oct 2014 12:29 PM

காஷ்மீர் விவகாரம்: பாக். கோரிக்கையை நிராகரித்தது ஐ.நா.

எல்லையில் நிலவும் பதற்றமான சூழலுக்கு முடிவு ஏற்படுத்த, இந்தப் பிரச்சினையில் சர்வதேச சமூகம் தலையிட வேண்டும் என்ற பாகிஸ்தானின் கோரிக்கையை ஐக்கிய நாடுகள் அமைப்பு நிராகரித்தது.

காஷ்மீர் பிரச்சினையில் தலையிட்டு தீர்வு காண வேண்டும் என்று பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சர்தாஜ் அஸீஸ் அக்டோபர் 12-ஆம் தேதி ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கி மூனுக்கு கடிதம் எழுதினார்.

இந்த நிலையில், காஷ்மீர் எல்லைப் பிரச்சினையில் சர்வதேச தலையீடு சாத்தியமில்லை என்று கூறி, பாகிஸ்தானின் கோரிக்கையை ஐ.நா. நிராகரித்துள்ளது.

இது குறித்து பான் கி மூனின் துணை செய்தித் தொடர்பாளர் ஃபர்கான் ஹக் கூறும்போது, "இந்தியா - பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளின் எல்லையில் மீண்டும் பதற்றமான சூழல் நிலவுவது கவலை அளிக்கிறது.

எல்லையில் நடக்கும் தாக்குதல்களால் இரு நாட்டு மக்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். உயிர் சேதமும் பொருட்சேதமும் ஏற்பட்டுள்ளது. மக்கள் தங்களது வீடுகளை விட்டு வெளியேறி உள்ளனர். இதனை சரி செய்வதற்கான பேச்சுவார்த்தையும் பலன் அளிக்காமல் உள்ளது.

இந்தப் பிரச்சினையை நீண்ட கால அடிப்படையில் தீர்வு ஏற்படுத்த பேச்சுவார்த்தை ரீதியிலான இணக்கத்தை இருத் தரப்பும் ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். இரு நாடுகளின் முயற்சியால் மட்டுமே காஷ்மீரில் நிலையான அமைதி ஏற்படும்" என்று அவர் தெரிவித்தார்.

இந்தியா - பாகிஸ்தான் இடையாயான போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி பாகிஸ்தான் ராணுவம் கடந்த சில மாதங்களாக காஷ்மீர் மாநில எல்லையில் ராணுவ நிலைகள் மீதும், கிராமங்கள் மீதும் குண்டு வீசி தாக்குதல் நடத்தி வருகிறது.

கடந்த செப்டம்பர் மாதத்தில் மட்டும் பாகிஸ்தான் ராணுவத்தின் தாக்குதலில் அப்பாவி பொதுமக்கள் 8 பேர் கொல்லப்பட்டனர். மேலும், பாதுகாப்பு படையினர் 13 பேர் உள்பட 90–க்கும் அதிகமான பேர் காயம் அடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x