ஜிடிபி வளர்ச்சி மந்தம்; மோடி அரசு அடித்துக் கொண்ட செல்ஃப் கோல்: சீன அரசு நாளிதழில் கிண்டல்

ஜிடிபி வளர்ச்சி மந்தம்; மோடி அரசு அடித்துக் கொண்ட செல்ஃப் கோல்: சீன அரசு நாளிதழில் கிண்டல்

Published on

ஜனவரி-ஏப்ரல் காலாண்டில் இந்திய உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி 6.1% என்று மந்தமடைந்ததை வைத்து சீன அரசு நாளிதழ் தனது கருத்துகளை பதிவிட்டுள்ளது.

இந்திய பொருளாதார மந்த வளர்ச்சியை ‘அருவருக்கத்தக்க ஆச்சரிய செய்தி’ என்றும் சீனாவுக்கும் இந்தியாவுக்குமான பொருளாதார போட்டியை யானைக்கும் டிராகனுக்குமான போட்டி என்றும் வர்ணித்துள்ளது சீன நாளிதழ்.

மேலும் மோடி அரசு தனது சொந்த கோலிலேயே பந்தை அடித்துக் கொண்டது (செல்ஃப் கோல்), வரும் காலங்களிலாவது இது போன்ற செல்ஃப் கோல்களை இந்தியா அடித்துக் கொள்ளாது என்று நம்புகிறோம் என்றும் அந்தக் கட்டுரை கூறியுள்ளது.

“யானைக்கும் டிராகனுக்கும் இடையேயான வர்த்தகப் போட்டியில் மந்தமான ஜிடிபியினால் இந்தியாவுக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது. இதன் மூலம் சீனா அதிவேகமாக வளரும் பொருளாதாரம் என்ற தகுதியை மீட்டெடுத்துள்ளது.

ஆய்வாளர்கள் 7% வளர்ச்சி என்று கணித்திருந்தார்கள் ஆனால் 6.1% தான் வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. இதற்கு இந்தியப் பொருளாதாரத்தின் அடியில் இருக்கும் சில பிரச்சினைகள் காரணமாக இருக்கலாம்.

இது முன்னமேயே கணிக்கப்பட்டதுதான் பின் ஏன் இவ்வளவு அதிர்ச்சி? அக்டோபர்-டிசம்பர் காலாண்டில், அதுவும் நரேந்திர மோடி பணமதிப்பு நீக்கம் அறிவிப்பு செய்த காலக்கட்டத்தில் 7% வளர்ச்சி இருந்துள்ள போது, தற்போது ஏன் குறைந்தது என்பதே ஆச்சரியத்துக்குக் காரணம்.

இது பணமதிப்பு நீக்க நடவடிக்கையை அரசு எப்படி கணித்திருக்கிறது என்ற எதார்த்தத்தையே காட்டுகிறது” என்று தெரிவித்துள்ளது.

இதே ஜனவரி-மார்ச் காலாண்டில் சீனா 6.9% பொருளாதார வளர்ச்சி கண்டுள்ளது, இது அரசின் கணிப்பான 6.5% க்கும் அதிகமானது என்பது குறிப்பிடத்தக்கது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in