Published : 15 Oct 2014 03:21 PM
Last Updated : 15 Oct 2014 03:21 PM

ஹுத்ஹுத் புயலால் ரூ.70 ஆயிரம் கோடி சேதம்: ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு தகவல்

கடலோர ஆந்திர மாநிலத்தை புரட்டி போட்ட ‘ஹுத் ஹுத்’ புயல் காரணமாக, சுமார் ரூ.70 ஆயிரம் கோடி வரை சேதம் ஏற்பட்டி ருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது. புயலுக்கு பலியானோர் எண் ணிக்கை 35 ஆக அதிகரித்துள்ளது.

இதுகுறித்து ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு நேற்று விசாகப் பட்டினத்தில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

ஹுத் ஹுத் புயலின் சீற்றத்தால் கடலோர மாவட்டங்களில் உள் கட்டமைப்பு வசதிகள் சின்னா பின்னமாகி உள்ளன. ஸ்மார்ட் சிட்டியாக உருவாக்க திட்டமிடப் பட்டிருந்த விசாகப்பட்டினம் நகரம் உருக்குலைந்து போய்விட்டது. ஆனாலும் மறு சீரமைப்பு பணிகள் விரைந்து நடைபெறுவதால் அடுத்த 3 அல்லது 4 நாட்களுக்குள் இயல்பு நிலை திரும்பும். இப் பணிகள் முடிந்தவுடன் விசாகப் பட்டினம் ஸ்மார்ட் சிட்டியாக உருவாக்கப்படும்.

புயலால் பாதிக்கப்பட்ட விஜய நகரம், விசாகப்பட்டினம், கா குளம் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த சில கிராமங்கள் இன்னமும் மின்சார விநியோகமின்றி இருளில் முழ்கி உள்ளன. இப்பகுதியில் பாதிப்புக்குள்ளான மின்சாரம், போக்குவரத்து, தகவல் தொழில் நுட்ப சேவைகள் சீரமைக்கப்பட்டு வருகின்றன.

இதுவரை நடைபெற்ற முதற் கட்ட ஆய்வின்படி, ஹுத்ஹுத் புயலால் சுமார் ரூ.60 ஆயிரம் கோடி முதல் ரூ.70 ஆயிரம் கோடி வரை சேதம் ஏற்பட்டுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது. மத்திய பேரிடர் ஆய்வுக் குழு விரைவில் இங்கு வந்து இழப்பை ஆய்வு செய்யும். இவ்வாறு சந்திரபாபு நாயுடு தெரிவித்தார்.

பஸ்ஸில் தூங்கும் முதல்வர்

ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் விசாகப்பட்டினத்திலேயே தங்கி மீட்பு, நிவாரணப் பணி களை கவனித்து வருகிறார். பாதிக் கப்பட்ட பகுதிகளை நேரடியாக ஆய்வு செய்து உடனுக்குடன் சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவு வழங்கி வருகிறார்.

புயலால் பாதிக்கப்பட்டவர் களின் பசியைப் போக்க தட்டுப் பாடின்றி உணவுப்பொருட்களை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். உழவர் சந்தை கள் மூலம் குறைந்த விலைக்கு காய்கறி விநியோகம் செய்யவும் உத்தரவிட்டுள்ளார்.

தினமும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அனைத்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி நிவாரண பணிகளை விரைவுபடுத்தி வருகிறார். அரசு விடுதிகள் பழுதடைந்து உள்ள தால், இவர் விசாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் பிரச்சாரத்தின்போது பயன்படுத்தப்படும் அனைத்து வசதிகளுடன் கூடிய பேருந்தி லேயே இரவில் தூங்குகிறார்.

பலி எண்ணிக்கை 35 ஆக உயர்வு

புயல் பாதிப்பு தொடர்பாக முதல்வ ரிடம் நேற்று 2-வது ஆய்வறிக் கையை அதிகாரிகள் வழங்கினர். அதில் கூறியிருப்பதாவது:

‘ஹுத் ஹுத்’ புயலால் பாதிக் கப்பட்ட பகுதிகளில் கடந்த 4 நாட்களாக மீட்பு பணிகள் நடை பெற்று வருகின்றன. இதில் கட்டிட இடிபாடுகள், மரங்களுக்கு அடியில் சிக்கி உயிரிழந்த உடல்கள் மீட்கப்பட்டு வருகின்றன.

இதுவரை 35 பேர் பலியாகி உள்ளனர். இதில் விசாகப்பட்டினத்தில் 25 பேரும், விஜயநகரத்தில் 8, காகுளத்தில் 2 பேரும் பலியாயினர். மீட்புப் பணி தொடர்வதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.

மேலும் கடலோர ஆந்திராவில் 2,250 கி.மீட்டர் வரை சாலைகள் சேதமடைந்துள்ளன. 7,866 வீடுகள் இடிந்து தரை மட்டமாகின. 3,368 கால்நடைகள் பலியாகி உள்ளன. 1.8 லட்சம் ஹெக்டேர் நிலப்பரப்பில் பயிர்கள் நாசமடைந்துள்ளன என அந்த அறிக்கையில் கூறப் பட்டுள்ளது.

உணவுப்பொருட்கள் இலவசம்

கடலோர ஆந்திராவில் ‘ஹுத் ஹுத்’ புயல் புரட்டி போட்ட விசாகப்பட்டினம், விஜய நகரம், காகுளம் ஆகிய மாவட்டங்களில் 9 லட்சம் குடும்பத்தினருக்கு ரேஷன் கடைகள், உழவர் சந்தைகள் மூலம் அத்தியாவசிய பொருட்கள் வழங்க அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. இதற்காக மற்ற மாவட்டங்களில் இருந்து அரிசி, பருப்பு, சமையல் எண்ணெய், மண்ணெண்ணெய், காய்கறிகள் வரவழைக்கப்பட்டுள்ளன. ரேஷன் கடைகள் மூலம் தலா 25 கிலோ அரிசி, ஒரு கிலோ துவரம்பருப்பு, 1லிட்; பாமாலின் எண்ணெய், அரை கிலோ உப்பு, மிளகாய் பொடி, 5 லிட்டர் மண்ணெண்ணெய் போன்றவை வழங்கப்படும். வியாபாரிகள் கள்ள சந்தையில் அதிக விலைக்கு பொருட்களை விற்றால் அவர்களது கடை உரிமம் ரத்து செய்யப்படும்.

தெலங்கானா அரசின் சகோதர பாசம்

‘ஹுத் ஹுத்’ புயலால் தீவிர தாக்குதலுக்கு உள்ளான ஆந்திர மாநிலத்துக்கு தெலங்கானா அரசு சார்பில் ரூ. 18 கோடி மதிப்புள்ள மின் உபரி பாகங்களை முதல்வர் சந்திரசேகர ராவ் வழங்கியுள்ளார். 530 டிரான்ஸ்பார்மர்கள், 28,300 மின் கம்பங்கள், 900 கி. மீட்டருக்கான மின் கம்பிகள் ஆந்திர மாநிலத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x