காஷ்மீர் விவகாரத்தில் சமரசம் செய்யத் தயார்: ஐ.நா சபை அறிவிப்பு

காஷ்மீர் விவகாரத்தில் சமரசம் செய்யத் தயார்: ஐ.நா சபை அறிவிப்பு
Updated on
1 min read

காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா, பாகிஸ்தான் இடையே சமரசம் செய்யத் தயார் என்று ஐ.நா. சபை அறிவித்துள்ளது.இதுகுறித்து ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கி-மூனின் செய்தித் தொடர்பாளர் பர்கான் ஹக் கூறியதாவது:

உலக நாடுகளில் ஏற்படும் பிரச்சினைகளைத் தீர்க்க நல்லெண்ண அலுவலகங்களை பான் கி-மூன் ஏற்படுத்தியுள்ளார். இதன் மூலம் அரசியல், ஆயுதப் பிரச்சினைகளைத் தடுக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா, பாகிஸ்தான் இடையே சமரசம் செய்ய ஐ.நா.வின் நல்லெண்ண அலுவலக தூதர்கள் தயாராக உள்ளனர் என்று தெரிவித்தார். கடந்த ஆகஸ்டில் பாகிஸ்தானில் சுற்றுப் பயணம் மேற்கொண்ட ஐ.நா. பொதுச்செயலாளர் பான் கி-மூன் காஷ்மீர் குறித்து கருத்து தெரிவித்தார்.

காஷ்மீர் பிரச்சினை ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் நிகழ்ச்சி நிரலில் உள்ளது. இரு நாடுகளும் விரும்பினால் ஐ.நா. சபை சமரசத்தில் ஈடுபடும் என்று அப்போது அவர் கூறினார். இப்போது பான் கி-மூன் சார்பில் அவரது செய்தித் தொடர்பாளரும் அதே கருத்தை மீண்டும் கூறியுள்ளார்.

காஷ்மீர் விவகாரத்தில் ஐ.நா. சபை உள்பட 3-ம் தரப்பு தலையீட்டை ஒருபோதும் அனுமதிக்க முடியாது என்று இந்தியா சார்பில் ஏற்கெனவே திட்டவட்டமாக அறிவிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in