Published : 03 Jan 2014 01:32 PM
Last Updated : 03 Jan 2014 01:32 PM

கார்கில் போர் பற்றி விசாரணை: பாகிஸ்தான் பாதுகாப்புத் துறை

கார்கில் போர் குறித்து விசாரணை நடத்தப்படும் என்று பாகிஸ்தான் பாதுகாப்புத் துறை அமைச்சர் கவாஜா ஆசிப் கூறினார். 1999-ம் ஆண்டு ஆட்சி கவிழ்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டதற்காக முஷாரப் மீது வழக்கு பதிவு செய்யப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். பாகிஸ்தான் பாதுகாப்புத் துறை அமைச்சர் கவாஜா ஆசிப் செய்தியாளர்களிடம் வியாழக் கிழமை கூறியதாவது:

“1999-ம் ஆண்டு நவாஸ் ஷெரீப் தலைமையிலான ஆட் சியை ராணுவப் புரட்சி மூலம் வீழ்த்திய முஷாரப் மற்றும் அவரின் அப்போதைய சக அதிகாரிகள் மீது வழக்கு தொடரப்படும். கார்கில் போர் தொடர்பாகவும் விசாரணை நடத்தப்படும்.

சட்டத்தின் முன் அனைவரும் சமம். அதே சமயம், முஷாரபை சிறையில் தள்ளாமல், அவரை பண்ணை வீட்டில் வீட்டுக் காவலில் வைத்ததன் மூலம் நாங்கள் பெருந்தன்மையுடன் நடந்து கொண்டோம். ஆனால், முஷாரபின் ஆட்சிக் காலத்தின் போது நவாஸ் ஷெரீபையும், பாகிஸ்தான் முஸ்லீம் லீக் (நவாஸ்) தலைவர்களையும் கைது செய்து சிறையில் அடைத்தார்” என்றார்.

முஷாரபுக்கு துபாயிலும், லண்டனிலும் கோடிக்கணக்கான மதிப்பிலான சொத்துகள் உள்ளன. இந்த சொத்துக்களையெல்லாம் அவர் எப்படி வாங்கினார்? இதனால் அவர் மீது ஊழல் வழக்கு பதிவு செய்யப்படும். அவர் மீதான வழக்குகளிலேயே தேசத் துரோக வழக்குதான் மிகவும் முக்கியமானது. அந்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்டாலே அவருக்கு போதிய தண்டனை கிடைத்து விடும்” என்றார் கவாஜா ஆசிப்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x