

இலங்கை முன்னாள் அதிபர் மஹிந்த ராஜபக்சவின் மகனும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச (30) கொழும்பில் நேற்று கைது செய்யப்பட்டார்.
இலங்கையில் கடந்த 2015 ஜனவரியில் நடந்த அதிபர் தேர்தலில் மஹிந்த ராஜபக்ச தோல்வியைத் தழுவினார். இதைத் தொடர்ந்து அவரது மனைவி, மகன்கள், சகோதரர்கள் மீது பல்வேறு ஊழல் வழக்குகள் தொடரப்பட்டன.
இந்தப் பின்னணியில் மஹிந்த ராஜபக்சவின் மூத்த மகனும் அவரது அரசியல் வாரிசாகக் கருதப் படும் நாமல் ராஜபக்ச கொழும்பில் நேற்று கைது செய்யப்பட்டார். நாடாளுமன்ற உறுப்பினரான அவர், கடந்த ஆட்சியின்போது ரக்பி விளையாட்டு வளர்ச்சி நிதிக்காக ரூ.7 கோடி நன்கொடை வசூல் செய்துள்ளார். ஆனால் அந்தப் பணம் ரக்பி விளையாட்டு வளர்ச்சி நிதியில் செலுத்தப்படாமல் அவரது சொந்த வங்கிக் கணக்கில் முதலீடு செய்யப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக நிதி குற்றப் புலனாய்வு பிரிவு போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். கொழும்பில் உள்ள அந்தப் பிரிவு போலீஸ் தலைமை அலுவலகத்தில் நாமல் நேற்று ஆஜரானார். அப்போது அவர் கைது செய்யப்பட்டார்.