

எகிப்து தலைநகர் கெய்ரோவில் 2 தேவாலாயங்களில் அடுத்தடுத்து நடத்தப்பட்ட தாக்குதலில் 43 பேர் பலியான நிலையில், இச்சம்பவத்துக்கு ஐஎஸ் அமைப்பு பொறுப்பேற்றுக் கொண்டுள்ளது.
இதுகுறித்து எகிப்து ஊடகங்கள் வெளியிட்ட செய்தியில், எகிப்து தலைநகர் கெய்ரோவிலுள்ள இரண்டு தேவாலயங்களில் ஞாயிற்றுக்கிழமை மக்கள் பிரார்த்தனைக்காக கூடியிருந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக குண்டு வெடித்தது. முதலில், தலைநகரில் உள்ள மார் கிர்கிஸ் தேவாலயத்தில் நடந்த குண்டுவெடிப்பில் 27 பேர் பலியாகினர்.
அதனைத் தொடர்ந்து சில மணி நேரத்தில் மற்றொரு தேவாலயமான செயிண்ட் மார்க் தேவாலயத்தில் குண்டு வெடித்ததில் 3 மூன்று போலீஸ் அதிகாரிகள் உட்பட 16 பேர் பலியாகினர்.
இவ்விரு தாக்குதல்களிலும் 70க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
காயமடைந்தவர்களில் பலரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது" எனக் கூறப்பட்டுள்ளது.
எகிப்தில் நடத்தப்பட்ட இந்த இரட்டை குண்டு வெடிப்புத் தாக்குதலுக்கு ஐஎஸ் தீவிரவாத இயக்கம் பொறுப்பேற்றுக் கொண்டுள்ளது.
எகிப்தில் கடந்த சில ஆண்டுகளாகவே சிறுபான்மையினராக உள்ள கிறிஸ்துவர்கள் மீது தொடர்ந்து தீவிரவாத தாக்குதல் நடந்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.