Last Updated : 31 Aug, 2016 02:41 PM

 

Published : 31 Aug 2016 02:41 PM
Last Updated : 31 Aug 2016 02:41 PM

சிரியா: ஐஎஸ் முக்கிய செய்தி தொடர்பாளர் கொல்லப்பட்டார்

ஐ.எஸ். அமைப்பின் செய்தித் தொடர்பாளரும், அதன் சதி திட்டங்கள் பலவற்றுக்கு மூளையாக செயல்பட்டவருமான அபு முகமத் அல் அதானி சிரியாவில் கொல்லப்பட்டார். இந்தத் தகவலை ஐ.எஸ். அமைப்பே வெளியிட்டுள்ளது.

இது தொடர்பாக ஐ.எஸ் அமைப்புக்கு ஆதரவாக செயல்பட்டு வரும் ஆமஃக் (amaq news agency) செய்தி நிறுவனம் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட தகவலில், “அலெப்போவில் ராணுவப் படைகள் நடத்திய தாக்குதலில் ஐ.எஸ் அமைப்பின் அல் அதானி கொல்லப்பட்டார். அவரின் மரணத்திற்கு பதில் தாக்குதலை நாங்கள் நடத்தியே தீருவோம் என்று சபதம் ஏற்கிறோம்” என்று கூறப்பட்டுள்ளது.

அல் அதானி கொல்லப்பட்ட விதம் குறித்து எந்த தகவலையும் ஐ.எஸ் அமைப்பு வெளியிடவில்லை. அல் அதானியின் மரணம் ஐ.எஸ் அமைப்புக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

யார் இந்த அபு முகமத் அல் அதானி?

அல் அதானியின் இயற்பெயர் தஹா சோபி ஃபலஹா.சிரியாவில் பிறந்த அல் அதானி தன்னுடைய 30களில் அல் கொய்தா அமைப்பில் இணைந்தார். அதன் பின் ஐ.எஸ் அமைப்பில் இணைந்து ஐ.எஸ் அமைப்பின் முக்கிய தாக்குதல் பலவற்றுக்கு மூளையாக இருந்து செயல்பட்டிருக்கிறார்.

கடந்த நவம்பர் மாதம் பிரான்ஸ் தலைநகரில் ஐ.எஸ் அமைப்பு நிகழ்த்திய தாக்குதலில் 130 பேர் கொல்லப்பட்டனர். பலர் காயமடைந்தனர். இந்த தாக்குதல் பின்னணியில் இருந்து திட்டங்களை வகுத்தவரும் அல் அதானியே.

மேலும் இணையங்களில் ஐ.எஸ் அமைப்பின் ஆடியோக்களையும், ஐ.எஸ் சம்பந்தப்பட்ட முக்கிய தகவல்களையும் வெளியிட்டு ஐ.எஸ் அமைப்பின் மிகப் பெரிய சக்தியாக செயல்பட்டு வந்தவர்.

அமெரிக்க அதிபர் ஒபாமாவை முட்டாள் என விமர்சித்ததுடன் அமெரிக்காவின் மாகாணங்களின் செயலாளர் ஜான் கெரியை வயதான சீசர் எனவும் விமர்சித்தார்.

அதுமட்டுமில்லாது சிரியாவின் அரசுப் படைகளுக்கு தொடர்ந்து ஆதவரவாக இருந்து வரும் சவுதி அரேபியாவை பலமுறை இழிவுப்படுத்தி விமர்சித்து வந்தார் அல் ஆதானி.

அல் அதானியின் மரணம் குறித்து அமெரிக்காவின் செய்தி தொடர்புச் செயலாளர் பீட்டர் குக் கூறும்போது, "அல் அதானியை மையமாகக் கொண்டு அமெரிக்கப் படைகள் நடத்திய தாக்குதலில் அல் அதானி கொல்லப்பட்டிருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அல் அதானியின் மரணம் ஐ.எஸ் அமைப்புக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது" என்றார்.

ஐ.எஸ் அமைப்பின் கோட்டை எனக் கருதப்படும் அலெப்போவில் ஐ.எஸ் அமைப்பு சமீப காலமாக வீழ்ச்சியைச் சந்திந்து வருகிறது. அமெரிக்க ஆதரவு பெற்ற சிரிய ஜனநாயகப் படைகள் அலெப்போவில் ஐ.எஸ் அமைப்பிடமிருந்து பெரும்பாலான பகுதியைக் கைப்பற்றியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x