Published : 03 Oct 2014 06:04 PM
Last Updated : 03 Oct 2014 06:04 PM

கடலின் அடிப் பரப்பில் இதுவரை அறியப்படாத ஆயிரக்கணக்கான மலைகள்: புதிய ஆய்வு

கண்டங்கள் உருவான விதம் பற்றி புதிய புரிதல்களை ஏற்படுத்தும் விதமாக கடலின் அடிப் பரப்பு (sea floor)குறித்த புதிய விரிவான வரைபடத்தை விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர்.

இதன்மூலம் கடலின் அடிப்பரப்பிலிருந்து எழும்பியுள்ள, இதுவரை அறியப்படாத ஆயிரக்கணக்கான மலைகள் இருப்பது தெரியவந்துள்ளது. இவை ‘கடல்மலைகள்’ என்று அழைக்கப்படுகின்றன.

உலகில் சிறியது முதல் பெரிய நிலநடுக்கங்கள் ஏற்படுவதற்கு இந்த புதிய கடலடித்தள மலைகளின் பங்களிப்பு மிக மிக அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

கடல் டெக்டானிக்ஸ் என்று அழைக்கப்படும் கடலடித்தள கண்டத் தட்டுக்களின் நகர்வு குறித்த புதிய புரிதல்களை இந்த வரைபடம் ஏற்படுத்தியுள்ளது.

செயற்கைக் கோள் அளித்துள்ள படங்களைக் கொண்டு இந்த புதிய வரைபடம் உருவாக்கப்பட்டுள்ளது.

ஐரோப்பிய விண்வெளி கழகத்தின் க்ரையோசாட்-2 மற்றும் நாசாவின் ஜேசன்-1 ஆகிய செயற்கைக் கோள்களில் உள்ள ராடார் சாதனங்கள் உதவியுடன் கடலடிப்பரப்பின் புவியீர்ப்பு அளவுகளை விஞ்ஞானிகள் பயன்படுத்தி கடலடி நிலவியல் அம்சங்களை இதுவரை இல்லாத அளவுக்கு வெளியிட்டுள்ளனர்.

"கடலடிப் பரப்பின் கண்டத் தட்டுகள் மற்றும் நிலப்பகுதி செயல்பாடுகளை புவி ஈர்ப்பு விசை பிரதிபலிக்கிறது” என்று இந்த ஆய்வை தலைமையேற்று நடத்திய கலிபோர்னியாவின் ஸ்கிரிப்ஸ் கடல் ஆய்வுக் கழக விஞ்ஞானி டேவிட் சாண்ட்வெல் தெரிவித்துள்ளார்.

பூமியின் மேற்பரப்பை 71% நீர் ஆகரமித்துள்ளது. கடலடிப்பரப்பின் 90% பகுதிகள் இதுவரை நேரடி ஆய்வு முறையில் கண்டறியப்படாதவையே.

“நமக்கு செவ்வாயின் நிலவியல் தெரிந்திருக்கிறது ஆனால் நமக்கு நெருக்கமான, வாழ்வைத் தீர்மானிக்கும் கடலடிப்பரப்பை பற்றி ஒன்றுமே அறிந்திருக்கவில்லை” என்று சிட்னியைச் சேர்ந்த நிலவியல் ஆய்வாளர் டயட்மார் முல்லர் கூறுகிறார்.

மாயமாகி மறைந்து இந்த நூற்றாண்டின் மிகப்பெரிய புதிரான மலேசிய விமானம் எம்.எச்.370 விவாகாரம் வெடித்த பிறகே கடலடிப்பரப்பு ரகசியங்கள் நம் அறிவுக்கு எட்டாத பல புதிர்களைக் கொண்டது என்ற அறிவு அனைவருக்கும் ஏற்பட்டுள்ளது என்கிறார் டாய்ட்மார் முல்லர்.

இந்த புதிய வரைபடம் தற்போது கடலடிப்பரப்பு மற்றும் துணைக் கடலடிப்பரப்பு நிலவியல் அமைப்புகளை வெளியிட்டுள்ளது. இதில் மெக்சிகோ வளைகுடாவிற்குக் கீழ் நடுக்கடலடி மலைத்தொடர் இருப்பது தெரியவந்துள்ளது. இந்த மலைத்தொடர் டெக்ஸாஸ் மாகாணம் அளவுக்கு பெரிதானது.

அதேபோல் அங்கோலாவுக்கு மேற்கே தெற்கு அட்லாண்டிக் கடலடிப்பரப்பில் 800 கிமீ நீள மலைத்தொடர் அமைப்பு இருப்பதும் தெரியவந்துள்ளது. இது தென் அமெரிக்கக் கண்டம் ஆப்பிரிக்காக் கண்டத்திலிருந்து பிரிந்த தருணத்தில் உருவான 'ரிட்ஜ்' என்பது குறிப்பிடத் தக்கது.

கண்டத் தட்டுக்கள் நகர்வதால் இத்தகைய ‘பரவும் மலைத்தொடர்கள்’ என்ற பூமியின் பிளவுகள் ஏற்படுகிறது. இந்தப் பிளவுகளைதான் மேக்மா குழம்பு இட்டு நிரப்புகிறது என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

‘இது போன்ற மலைத்தொடர்கள் எங்கு, எப்போது இருந்தன என்பதை அறிவது பூமியின் நிலவியல் கடந்த காலம் என்பதை அறிய அவசியமானது என்று விஞ்ஞானி முல்லர் கூறுகிறார்.

இந்த வரைபடத்தில் கடலடிப்பரப்பிலிருந்து எழும்பியுள்ள சுமார் 1.6 கி.மீ அல்லது அதற்கு அதிகமான உயரமுள்ள ஆயிரத்திற்குமதிகமான மலைகள் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. இம்மலைகள் பல்வேறு விதமான படிவுகளால் மறைந்துள்ளது.

இதனால் உண்மையான கடல் ஆழம் என்னவென்பது தலையைக் கிறுகிறுக்கச் செய்யும் அளவுக்கு புரியாத புதிராகவே உள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x