Published : 26 Apr 2017 10:43 AM
Last Updated : 26 Apr 2017 10:43 AM

சிரியாவில் போர்முனையில் சிக்கித் தவிக்கும் 4 லட்சம் மக்கள்: ஐக்கிய நாடுகள் சபை கவலை

சிரியாவில் சுமார் 4 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் போர் முனையில் சிக்கித் தவிக்கின்றனர் என்று ஐ.நா. சபை கவலை தெரிவித் துள்ளது.

சிரியா, இராக்கில் பெரும் பகுதியை ஐ.எஸ். தீவிரவாதிகள் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத் திருந்தனர். இதில் இராக்கில் ஐ.எஸ். தீவிரவாதிகள் பெரும் பின்னடைவைச் சந்தித்துள்ளனர். அமெரிக்க கூட்டுப்படைகளின் ஆதரவுடன் ஐ.எஸ். தீவிரவாதி களிடம் இருந்த பகுதிகளை இராக் ராணுவம் மீட்டுள்ளது.

தற்போது அமெரிக்க கூட்டுப் படைகளின் கவனம் ஐ.எஸ். தீவிரவாதிகளின் தலைமையகமான சிரியாவின் ராக்கா நகர் மீது திரும்பியுள்ளது. அந்த நகரை அமெரிக்காவின் ஆதரவு பெற்ற குர்து படைகள் சுற்றி வளைத்துள்ளன. அதேநேரம் அமெரிக்க கூட்டுப் படைகளின் போர் விமானங்கள் ராக்கா நகர் மீது இடைவிடாது குண்டுகளை வீசி வருகின்றன.

அந்த நகரில் ஐ.எஸ். தீவிரவாதி களைத் தவிர்த்து 4 லட்சத்துக் கும் மேற்பட்ட மக்கள் வசிக் கின்றனர். போர் முனையில் சிக்கியுள்ள அவர்களின் நிலைமை பரிதாபகரமாக உள்ளது.

இதுகுறித்து ஐ.நா. சபையின் செய்தித் தொடர்பாளர் பர்ஹான் ஹக் கூறியதாவது: சில வாரங்களாக ராக்கா நகர் மீதான தாக்குதல் தீவிரமாகி உள்ளது. இதனால் மருத்துவமனைகள், பள்ளிகள், குடிநீர் ஆதாரங்கள், சந்தைகள் கடுமையாக சேதமடைந்துள்ளன.

ஐ.எஸ். தீவிரவாதிகள், அமெரிக்க போர் விமானங்களின் குண்டு வீச்சுக்கு நடுவில் சுமார் 4 லட்சம் மக்கள் சிக்கியுள்ளனர். அவர்களின் பாதுகாப்பு கேள்விக் குறியாகி உள்ளது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

ராக்கா நகரில் குடிநீர், உணவு, மருந்து பொருட்களுக்கு கடும் பற்றாக்குறை நிலவுவதாக அங்கிருந்து தப்பிய சிலர் தெரிவித்துள்ளனர்.

இதனிடையே சிரியா அதிபர் ஆசாத்துக்கு ஆதரவாக ரஷ்ய போர் விமானங்கள் நேற்று டூவேலா என்ற பகுதியில் குண்டுகளை வீசியது. இதில் கிளர்ச்சிப் படையைச் சேர்ந்த 2 வீரர்கள் உட்பட 12 பேர் பலியாகினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x