‘எந்த நேரத்திலும், எந்த இடத்திலும்’ அணுகுண்டு சோதனை நடத்துவோம்: வடகொரியா எச்சரிக்கை

‘எந்த நேரத்திலும், எந்த இடத்திலும்’ அணுகுண்டு சோதனை நடத்துவோம்: வடகொரியா எச்சரிக்கை
Updated on
1 min read

எந்த இடத்திலும், எந்த நேரத்திலும் அணுகுண்டு சோதனை நடத்துவோம் என்று வடகொரியா எச்சரிக்கை விடுத்துள்ளது.

அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மற்றும் சீனா ஆகியவை கடும் எச்சரிக்கைகள் விடுத்தும் தனது 6-வது அணுகுண்டு சோதனை மற்றும் நீண்ட தூர ஏவுகணை சோதனை ஆகியவற்றை நடத்த வடகொரியா மீண்டும் ஆயத்தமாகி வருகிறது.

வடகொரிய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் கூறும்போது, “அமெரிக்கா எடுக்கும் எந்த வித நடவடிக்கைக்கும் பதிலடி கொடுக்க தயாராகவே இருக்கிறோம்” என்று கூறியுள்ளார்.

அமெரிக்கா தனது விரோதக் கொள்கைகளைக் கைவிடாவிடில் ‘முன் தவிர்ப்பு அணு ஆயுத தாக்குதல்’ திறன்களை நாங்கள் எப்போதும் தயார் நிலையிலேயே வைத்திருப்போம் என்று அவர் மேலும் கூறியுள்ளார்.

“நாங்கள் சக்திவாய்ந்த அணு ஆயுதங்களை வைத்திருக்கா விட்டால், இந்நேரம் அமெரிக்கா மற்ற நாடுகளுக்கு எதிராகப் பிரயோகித்த அராஜகங்களை எங்கள் மீதும் பிரயோகித்திருக்கும்” என்றார் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர்.

அமெரிக்க அமைச்சர் ரெக்ஸ் டில்லர்சன் கடந்த வாரம் வடகொரியாவை எச்சரித்த போது வடகொரியா மீது ராணுவ நடவடிக்கை எடுக்கும் சாத்தியக்கூறுகள் இருக்கவே செய்கிறது என்றார்.

இதற்குப் பதிலடியாகவே தற்போது வடகொரியா இவ்வாறு பேசிவருகிறது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in