Last Updated : 08 Oct, 2014 09:37 AM

 

Published : 08 Oct 2014 09:37 AM
Last Updated : 08 Oct 2014 09:37 AM

லிட்டில் இந்தியா கலவர வழக்கு இந்தியருக்கு 14 மாதம் சிறை: தண்டனை பெற்ற 21-வது பேர்

சிங்கப்பூரின் லிட்டில் இந்தியா பகுதியில் கடந்த ஆண்டு நடந்த கலவரத்தின்போது, பஸ் சேதப்படுத்தப்பட்டது தொடர்பாக சின்னதம்பி மாலேசன் (23) என்ற இந்திய இளைஞருக்கு 14 மாதங்கள் சிறைத் தண்டனை விதித்து சிங்கப்பூர் நீதிமன்றம் நேற்று தீர்ப்பு வழங்கியது.

கடந்த 40 ஆண்டுகளில் நடைபெற்ற மிக மோசமான இந்த கலவரத்தில் இதுவரை தண்டிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 21 ஆக உயர்ந்துள்ளது. கடந்த ஆண்டு டிசம்பர் 8-ம் தேதி கலவர நாளன்று, லிட்டில் இந்தியா பகுதியில் ரேஸ்கோர்ஸ் சாலை அருகில் வன்முறையாளர்கள் ஒரு பஸ் மீது கற்களை வீசுவதை சின்னதம்பி பார்த்துள்ளார். பிறகு இவரும் அக்கும்பலுடன் சேர்ந்து கல்லை பஸ் மீது வீசியுள்ளார்.

சின்னதம்பி தனது தவறை ஒப்புக்கொண்டதால் அவருக்கு குறைந்தபட்ச தண்டனை வழங்கவேண்டும் என நீதிமன்றத்தில் அவரது வழக்கறிஞர் கலைமோகன் கேட்டுக்கொண்டார்.

“சம்பவத்தின்போது சின்ன தம்பி மது அருந்தியிருக்கவில்லை. அவரது நடத்தை மீது அவரது முதலாளி மிகுந்த நம்பிக்கை வைத்துள்ளார். இதற்குமுன் ஜாமீன் தொகையை அவர்தான் செலுத்தினார்” என்றும் கலைமோகன் வாதிட்டார். இதையடுத்து சின்னதம்பிக்கு 14 மாதங்கள் சிறைத் தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.

லிட்டில் இந்தியா பகுதியில் இந்தியத் தொழிலாளர் ஒருவர் பஸ் மோதி இறந்ததை தொடர்ந்து அங்கு கலவரம் வெடித்தது. கலவர இடத்தில் சுமார் 400 இந்தியத் தொழிலாளர்கள் இருந்ததாக கூறப்படுகிறது. கலவரத்தின்போது 54 போலீஸார் காயமடைந்தனர். 23 அவசரகால ஊர்திகள் சேதப்படுத்தப்பட்டன. இவற்றில் 5 வாகனங்கள் முற்றிலும் எரிந்து சேதமாயின.

இதில் காவல்துறை வாகனங்களுக்கு சுமார் ரூ.3.03 கோடி சேதம் என்றும் தனியார் பஸ்களுக்கு ரூ.18 லட்சம் சேதம் என்றும் மதிப்பிடப்பட்டுள்ளது. கலவரத்தில் தொடர்புடைய 52 இந்தியர்கள் சிங்கப்பூரில் இருந்து வெளியேற்றப்பட்டனர். ‘வொர்க் பர்மிட்’ மூலம் அங்கு பணியாற்றும் 25 இந்தியர்கள் மீது கலவர வழக்கு தொடரப்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x