

அமிர்தசரஸில் உள்ள பொற்கோயிலில் 1984 ஆம் ஆண்டு பல உயிர்களை பலிகொண்ட 'ப்ளூ ஸ்டார் நடவடிக்கை'யில் இந்தியாவுக்கு அறிவுறுத்தல் வழங்கியதை பிரிட்டன் அரசு ஒப்புக்கொண்டது.
இது தொடர்பாக, பிரிட்டன் நாடாளுமன்றத்தில், அந்நாட்டின் வெளியுறவு அமைச்சர் வில்லியம் ஹாக் கூறும்போது, இந்தியாவின் நடவடிக்கைக்கு குறைவான விளைவுகளைத் தரக்கூடிய வகையில் மட்டுமே பிரிட்டன் ராணுவம் அறிவுரைகளை வழங்கியதாக தெரிவித்தார்.
இந்திய ராணுவம் ப்ளூ ஸ்டார் ஆபரேஷனை நிகழ்த்துவதற்கு, பிரிட்டனைச் சேர்ந்த சிறப்புப் படை அதிகாரி அறிவுரைகளை வழங்கியதாக அண்மையில் சில ஆவணங்கள் தெரிவித்தன.
அதன் தொடர்ச்சியாக, 1984 நிகழ்வில் பிரிட்டனின் பங்கு குறித்து உடனடியாக விசாரணை நடத்த சமீபத்தில் அந்நாட்டு அரசு உத்தரவிட்டது. அதன் தொடர்ச்சியாகவே, இந்த விகாரத்தில் தமது பங்கை பிரிட்டன் ஒப்புக்கொண்டுள்ளது.
கடந்த 1984 ஆம் ஆண்டு அமிர்தசரஸின் பொற்கோயிலில் பதுங்கிய பிரிவினைவாதிகளுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட இந்திய ராணுவத்தின் நடவடிக்கையே ப்ளூ ஸ்டார் ஆபரேஷன். அதன் விளைவாக, பலர் கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.