சீனாவில் மீண்டும் பறவைக் காய்ச்சல்: 2 பேர் உயிரிழப்பு

சீனாவில் மீண்டும் பறவைக் காய்ச்சல்: 2 பேர் உயிரிழப்பு
Updated on
1 min read

சீனாவில் மீண்டும் பறவைக் காய்ச்சல் பரவி வருகிறது. இந்த மாத தொடக்கத்திலிருந்து இதுவரை 40-க்கும் மேற் பட்டோர் இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். 2 பேர் இறந்துள்ளனர்.

ஷாங்காய் நகராட்சி மற்றும் ஜியாங்சு, புஜியான், ஜெஜியாங் மற்றும் குவாங்டாங் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த 40-க்கும் மேற்பட்டோர், பறவைக் காய்ச்சலுக்குக் காரணமான எச்7என்9 வைரஸ் தாக்குதலால் பாதிக்கப்பட்டுள்ளதாக சீன அரசின் செய்தி நிறுவனமான ஜின்ஹுவா புதன்கிழமை தெரிவித்தது.

இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ள ஜியாங்சு மாநிலத்தைச் சேர்ந்த 71 வயது முதியவரின் நிலைமை மோசமாக உள்ளதாக சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் ஷாங்காய் நகரில் 31 வயது டாக்டர் உட்பட 2 நோயாளிகள் சமீபத்தில் இறந்தனர்.

பறவைக் காய்ச்சல் நோய் குறித்து உலக சுகாதார அமைப்பு உன்னிப்பாக கவனித்து வருகிறது. சீனாவில் கடந்த ஆண்டு 134 பேர் இந்த நோயால் பாதிக்கப்பட்டு அதில் 45 பேர் இறந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இப்போது குளிர்காலம் என்பதால் பறவைக் காய்ச்சல் நோய் வேகமாக பரவி வருகிறது. இதனால் கோழிக்கறியை நன்கு வேகவைத்து சாப்பிடுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

கடந்த ஆண்டு, உலக சுகாதார அமைப்பின் அனுமதியுடன் சீனாவில் பறவைக்காய்ச்சல் தடுப்பூசி போடப்பட்டது. அடுத்த சில தினங்களில் சீனாவில் புத்தாண்டு பிறக்க உள்ளது. அப்போது, பெரும்பாலானவர்கள் கோழிக்கறியைச் சாப்பிடவுள்ள நிலையில் இந்த நோய் பரவி வருவது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in