Published : 15 Mar 2014 11:02 AM
Last Updated : 15 Mar 2014 11:02 AM

மலேசிய விமானம் கடத்தல்?- கஜகஸ்தான், அந்தமான் பகுதிகளில் தேடுதல் தீவிரம்

மாயமான மலேசிய விமானம் கடத்தப்பட்டிருக்கலாம் என்று புதிய தகவல்கள் வெளியாகி உள்ளன.

இதுகுறித்து மலேசிய பிரதமர் நஜீப் ரசாக் கூறியபோது, மாயமான விமானம் கடத்தப்பட்டிருக்கலாம் என்று ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன, ஆனால் கடத்தல் இதுவரை உறுதி செய்யப்படவில்லை என்று தெரிவித்தார்.

மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து சீனத் தலைநகர் பெய்ஜிங்குக்கு சனிக்கிழமை அதிகாலை 12.40 மணிக்கு 237 பயணிகள், விமானி, துணை விமானி உள்பட 12 ஊழியர்களுடன் மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் புறப்பட்டது.

அதிகாலை 1.20 மணி அளவில் கோலாலம்பூர் விமான நிலைய கட்டுப்பாட்டு அறை ரேடாரில் இருந்து விமானம் மாயமாய் மறைந்தது. அந்த விமானத்தில் 152 சீனர்கள், 5 இந்தியர்கள் உள்பட 14 நாடுகளைச் சேர்ந்தோர் பயணம் செய்தனர்.

மாயமான பிறகு 7 மணி நேரம் பறந்தது

கடைசி ரேடார் பதிவின்படி தென்சீனக் கடல் பகுதியில் விமானத்தை தேடுதல் பணி நடை பெற்றது. அதன்பின்னர் அந்தமான் கடல் பகுதி வரைக்கும் தேடுதல் பணி விரிவுபடுத்தப்பட்டது. பல் வேறு நாடுகளைச் சேர்ந்த 58 விமானங்கள், 43 கப்பல்கள் ஒரு வாரமாக தேடியும் விமானம் குறித்து இதுவரை எந்தத் தடய மும் கிடைக்கவில்லை.

இந்நிலையில் விமானம் மாயமாகி 7 மணி நேரத்துக்குப் பிறகு சனிக்கிழமை காலை 8.11 மணிக்கு செயற்கைக்கோளில் பதிவாகியுள்ளது இப்போது தெரியவந்துள்ளது. எனவே விமானத்தை நன்கு கையாளத் தெரிந்தவர்கள் அதனை கடத்தி யிருக்கக்கூடும் என்று சந்தேகம் வலுத்துள்ளது.

மலேசிய பிரதமர் சிறப்பு பேட்டி

மலேசிய பிரதமர் நஜீப் ரசாக் கோலாலம்பூரில் நிருபர்களுக்கு நேற்று அளித்த பேட்டியில் கூறியதாவது: மலேசியாவின் கிழக்கு கடற்கரைப் பகுதியில் விமானம் பறந்தபோது அதன் தகவல் தொடர்புகள் அனைத்தும் அணைக்கப்பட்டுள்ளன. விமானம் வழக்கமான பாதையில் செல்லாமல் மேற்காக திரும்பி பின்னர் வடமேற்கு திசையில் பறந்திருப்பதற்கான ஆதாரம் கிடைத்துள்ளது.

சனிக்கிழமை காலை 8.11 மணிக்கு அந்த விமானம் செயற்கைக்கோள் ஒன்றில் பதிவாகியுள்ளது. இந்த நடவடிக் கைகள் அனைத்தும் விமானத்தில் இருந்த யாரோ ஒருவர் அல்லது ஒரு குழுவினரின் திட்டமிட்ட செயல் என்று தெரிகிறது. விமானம் எவ்வளவு தொலைவு பறந்திருக்க முடியும் என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

அண்மையில் கிடைத்த செயற்கைக்கோள் பதிவுகளின்படி கஜகஸ்தான், துர்க்மெனிஸ் தான் எல்லை முதல் தாய்லாந் தின் வடக்கு எல்லை வரையி லான பகுதியில் விமானம் பறந்திருக்கக்கூடும் அல்லது இந்தோனே ஷியா முதல் இந்திய பெருங் கடல் தென்பகுதி வரை பறந்திருக்கக்கூடும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

செயற்கைக்கோள் தகவல்கள் மூலம் விசாரணை புதிய கோணத் துக்கு திரும்பியுள்ளது. விமான ஊழியர்கள் மற்றும் பயணிகள் குறித்து மீண்டும் விசாரணை தொடங்கப்பட்டுள்ளது.

விமானம் கடத்தப்பட்டிருக் கலாம் என்று ஊடகங்களில் தகவல்கள் வெளியாகியுள்ளன. எனினும் இதுவரை உறுதியான தகவல்கள் கிடைக்கவில்லை.

என்ன காரணத்தினால் விமானம் திசை மாறி பறந்தது என்பது குறித்து மலேசிய அதிகாரி கள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இப்போது தென்சீனக் கடலில் தேடுதல் பணியை நிறுத்தி விட்டோம். எங்களது தேடுதல் பணியின் எல்லைகளை மாற்றியுள் ளோம். ரேடார் பதிவு உள்ளிட்ட முக்கிய தகவல் களையும் கேட்டுள்ளோம் என்று மலேசிய பிரதமர் தெரிவித்தார்.

விமானி வீட்டில் சோதனை

பிரதமரின் பேட்டி நிறைவடை வதற்கு முன்பே விமானி ஜகாரி அகமது ஷாவின் (53) கோலாலம்பூர் வீட்டில் போலீஸார் சோதனை நடத்தினர். மேலும் துணை விமானி பாரிக் அப்துல் ஹமீதுவின் (27) வீட்டில் இருந்து அவரது சகோத ரர்கள் நீண்டநாள் வெளியூர் பயணத்துக்கு செல்வதுபோல் காரில் புறப்பட்டனர். அவர் களும் விசாரணைக்கு அழைக்கப்பட்டி ருக்கலாம் என்று தெரிகிறது.

அந்தமான் கடல் பகுதியில் தீவிர தேடுதல்

செயற்கைக்கோள் பதிவு தகவலின்படி அந்தமான் கடல் பகுதியில் தீவிர தேடுதல் பணி நடைபெற்று வருகிறது. இதுகுறித்து இந்திய ராணுவ அதிகாரி ஒருவர் கூறியபோது, மாயமான விமானத்தை தேடுவது வைக்கோலில் குண்டூசியை தேடுவது போன்றது, எனினும் தொடர்ந்து தேடுதல் பணி நடை பெறுகிறது என்று தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x