Published : 18 Jan 2017 04:41 PM
Last Updated : 18 Jan 2017 04:41 PM

இறையாண்மையை மதிக்கப் பழகுங்கள்: சீனாவுக்கு இந்தியா வலியுறுத்தல்

சீனா-பாகிஸ்தான் பொருளாதார நடவடிக்கைகளுக்கான பாதை இந்தியா வழியாகவே செல்கிறது என்பதை சுட்டிக்காட்டி இந்தியாவின் இறையாண்மையை சீனா மதிக்கப் பழக வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது.

ரைசினா உரையாடலில் இந்திய வெளியுறவுச் செயலர் எஸ்.ஜெய்சங்கர், சீனா-பாகிஸ்தான் பொருளாதார பாதையில் இந்தியாவின் பிரதேச இறையாண்மை குறித்து சீனா இந்தியாவின் அக்கறைகளில் கவனம் செலுத்துவதில்லை என்று சாடினார்.

“சீனா தனது இறையாண்மை விவகாரம் என்றால் உடனே உணர்ச்சிவயப்படுகிறது. அதே போல்தான் அவர்கள் மற்றவர்களின் இறையாண்மைக்கும் உணர்வுப்பூர்வமாக இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். இந்தியாவின் எதிர்வினை என்ன என்பதை மக்கள் நிச்சயம் புரிந்து கொள்வார்கள். சீனா-பாகிஸ்தான் பொருளாதார பாதை செல்வது நாங்கள் எங்கள் பிரதேசமாக கருதும் இடம். எனவே இதில் சிந்தனை தேவை. ஆனால் சீனாவிடமிருந்து இதற்கான அறிகுறிகள் எதுவும் இல்லை என்பதை வருத்தத்துடன் கூறிக்கொள்கிறோம்” என்றார்.

இந்த உரையாடலின் தொடக்க உரையில் பிரதமர் மோடியும், “பிரதேச தொடர்புக்கு இறையாண்மைக்கு மதிப்பளித்தல் என்பது முக்கியம்” என்றார். பாகிஸ்தான் சீனா இடையேயான பொருளாதார ஒப்பந்தத்தின் பாதை பாகிஸ்தான் ஆக்ரமிப்பு காஷ்மீர் வழியாகவே நடைபெறும். இந்த பாகிஸ்தான் ஆக்ரமிப்பு காஷ்மீர் வழியாக மேற்கொள்ளும் நடவடிக்கை இந்திய இறையாண்மையை மதிக்காத செயல் என்று தற்போது சீனாவுக்கு அறிவுறுத்தியுள்ளது.

“சீனாவுடன் வர்த்தக மற்றும் மக்களிடையேயான் தொடர்பு ஆகியவற்றில் ஏற்பட்டுள்ள நல்லிணக்கம், அரசியல் விவகாரங்களின் தாக்கத்தினால் மறைந்து போகிறது. ஆனால் அதே வேளையில் இருநாட்டு வளர்ச்சியும் எழுச்சியும் பரஸ்பர ஆதரவு என்ற அடிப்படையிலேயே இருக்க வேண்டும் என்பதை மறந்துவிடக் கூடாது” என்று வெளியுறவுச் செயலர் ஜெய்சங்கர் தெரிவித்தார்.

அணுப்பொருள் வழங்குநர் நாடுகளில் இந்தியா உறுப்பினராவதற்கான நடைமுறையிலும், பாகிஸ்தான் தீவிரவாதத் தலைவர் ஹபீஸுக்கு தடை விதிப்பதிலும் சீனா இந்தியாவுக்கு தடையாக இருந்து வருகிறது, அதே போல் தென்சீனக் கடல் விவகாரத்தில் சர்வதேச நாடுகளின் நிலைப்பாட்டுடன் இந்தியா இணைந்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x