

அமெரிக்காவின் புகழ்பெற்ற நாட்டுப்புற இசைக் கலைஞரும், சமூக ஆர்வலருமான பீட் சீகர் (94) நியூயார்க் நகர மருத்துவ மனையில் திங்கள்கிழமை காலமானார்.
நவீன அமெரிக்க நாட்டுப்புற இசை இயக்கம் உருவாக தூண்டுகோலாக விளங்கிய பீட் சீகர், உலகம் முழுவதும் பிரபலமான காலத்தால் அழியாத பல்வேறு பாடல்களை இயற்றியவர். சமூக, கலாச்சார ஊடகங்களால் ஒரு ஹீரோவாக பார்க்கப்படும் இவர் அமெரிக்காவின் மனசாட்சி என புகழப்படுகிறார். நியூயார்க் நகர மருத்துவமனை ஒன்றில், முதுமையால் ஏற்படும் இயற்கையான காரணங்களால் அவர் இறந்ததாக அவரது பேரன் கிடாமா கஹில் ஜாக்சன் தெரிவித்தார்.
சீகர் பல்வேறு முற்போக்கு அரசியல் போராட்டங்களில் பங்கேற்றவர். சுற்றுச்சூழல் செயல்பாட்டாளர், வியட்நாம், ஈராக் நாடுகளுக்கு எதிரான அமெரிக்காவின் போரை எதிர்த்து போராடியவர். இவர் கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்த காலத்தில் அமெரிக்க நாடளுமன்றத்துக்கு வந்து சாட்சியம் அளிக்க மறுத்ததால் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டவர். 2009-ல் பாராக் ஒபாமா, அதிபராக பொறுப்பேற்கும் நிகழ்ச்சியில் பீட் சீகர் இசை நிகழ்ச்சி நடத்தினார்.