Published : 19 Nov 2013 12:00 AM
Last Updated : 19 Nov 2013 12:00 AM

பாகிஸ்தானில் மீண்டும் வகுப்பு கலவரம்: 2 போலீஸார் உள்பட 3 பேர் பலி

பாகிஸ்தானின் வடமேற்கில் உள்ள ஹங்கு மற்றும் கோஹத் ஆகிய நகரங்களில் நடைபெற்ற மோதலில் 2 போலீஸார் உள்பட 3 பேர் இறந்ததையடுத்து அங்கு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது.

இதற்கிடையே, ராவல்பிண்டி நகரில் பிறப்பிக்கப்பட்டிருந்த ஊரடங்கு உத்தரவு திங்கள்கிழமை விலக்கிக் கொள்ளப்பட்டது.

ராவல்பிண்டியில் மொஹரம் பண்டிகையன்று (வெள்ளிக்கிழமை) முஸ்லிம்களில் இரு பிரிவினரிடையே ஏற்பட்ட மோதலில் 10 பேர் உயிரிழந்தனர். 44 பேர் காயமடைந்தனர். இதையடுத்து அங்கு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது.

இந்நிலையில், ராவல்பிண்டி கலவரத்தைக் கண்டித்து கைபர் பக்துன்கவா மாகாணம் கோஹத் மாவட்டத்தில் உள்ள ஜர்கரானாபாதில் ஷியா பிரிவினர் திங்கள்கிழமை பேரணி நடத்தினர். அப்போது, துப்பாக்கியுடன் வந்த சிலர் தாக்குதல் நடத்தி உள்ளனர்.

இதுகுறித்து, காவல் துறை அதிகாரி மஜார்ஜான் கூறுகையில், "இரு தரப்பினருக்கும் இடையே நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையின்போது அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த 2 போலீஸார் உள்பட 3 பேர் இறந்தனர். சிலர் காயமடைந்தனர். மேலும் திரா பஜார் பகுதியில் இருந்த கடைகளுக்கு தீ வைத்தனர்" என்றார்.

இதையடுத்து, கோஹத் மற்றும் ஹங்கு ஆகிய நகரங்கள் ராணுவத்தின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டன. அத்துடன் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

ராவல்பிண்டியில் ஊரடங்கு வாபஸ்

முன்னதாக, ராவல்பிண்டி நகரில் பிறப்பிக்கப்பட்டிருந்த ஊரடங்கு உத்தரவு திங்கள்கிழமை விலக்கிக் கொள்ளப்பட்டது.

இதையடுத்து, சாலைகளில் வைக்கப்பட்டிருந்த தற்காலிக தடுப்புகளை நகராட்சி நிர்வாகத்தினர் அகற்றினர். வீடுகளில் முடங்கிக் கிடந்த பொதுமக்கள் வெளியேறி தங்கள் வழக்கமான பணிகளில் ஈடுபட்டனர். கடைகள், வர்த்தக நிறுவனங்கள் திறக்கப்பட்டன.

முன்னதாக, மாவட்ட ஒருங்கிணைப்பு அதிகாரி சாஜித் ஜாபர் துல் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் ஊரடங்கு உத்தரவை விலக்கிக் கொள்வது என முடிவு எடுக்கப்பட்டது.

எனினும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மறு உத்தரவு வரும் வரை 144 தடை உத்தரவு நீடிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, நகரின் எந்தப் பகுதியிலும் 5 அல்லது அதற்கு மேற்பட்டவர்கள் ஒரே இடத்தில் கூடி பேசக்கூடாது. ராணுவம் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளது. ராவல்பிண்டியில் ஊரடங்கு தளர்த்தப்பட்ட பிறகு, ராஜா பஜார் பகுதியில் கூடிய மாணவர் அமைப்பினர் அரசுக்கு எதிராக கோஷம் எழுப்பினர். உடனடியாக அங்கு ராணுவம் விரைந்து சென்று நிலைமையை கட்டுக்குள் கொண்டுவந்தது. அவ்வழியாக வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளது.

வதந்தியை நம்ப வேண்டாம் என ராவல்பிண்டி காவல் துறை ஆணையர் காலித் மசூத் சவுத்ரி பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கலவரத்துக்குக் காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என பஞ்சாப் மாநில சட்ட அமைச்சர் ராணா சனாவுல்லா பத்திரிகையாளர்களிடம் கூறிய பிறகே இந்தப் போராட்டம் நடைபெற்றுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x