Published : 01 Jun 2017 12:00 PM
Last Updated : 01 Jun 2017 12:00 PM
ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் பயணி ஒருவர் விடுத்த வெடிகுண்டு மிரட்டலைத் தொடர்ந்து மலேசிய விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது. ஆனால், பயணிகள் சாதுர்யமாக செயல்பட்டு மிரட்டல் நபரைப் பிடித்து கட்டிவைத்தனர்.
புதன்கிழமை இரவு ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் விமான நிலையத்திலிருந்து கோலாலம்பூருக்கு எம்.எச் 128 என்ற விமானம் புறப்பட்டது. ஆனால் புறப்பட்ட 30 நிமிடங்களில் பயணி ஒருவரது வெடிகுண்டு மிரட்டல் காரணமாக விமானம் தரையிறங்கியது.
இதுகுறித்து ஆஸ்திரேலிய போலீஸார் தரப்பில், "மலேசிய விமானம் எம்.எச் 128-ல் பயணம் செய்த பயணி ஒருவர் தன்னிடம் வெடிகுண்டு இருப்பதாக மிரட்டல் விடுத்தார். மேலும் அவர் விமான ஓட்டியின் அறைக்கு சென்றுள்ளார். இதனால் பயணிகளுக்கிடையே பதற்றம் நிலவியிருக்கிறது. எனினும் விமானத்திலிருந்த பாதுகாவலர்கள் மற்றும் பயணிகள் சாதுர்யமாக செயல்பட்டு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபரைப் பிடித்து கட்டி வைத்தனர்" என்றார்.
பின்னர் இதுதொடர்பாக மெல்போர்ன் விமான நிலையத்துக்கு தெரிவிக்கப்பட்டு விமானம் பத்திரமாக தறையிறக்கப்பட்டது. வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். இதுதொடர்பாக விசாரணை நடந்து வருகிறது.
போலீஸாரின் முதல்கட்ட விசாரணையில் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் இலங்கையைச் சேர்ந்தவர் என்றும் அவர் மனநிலை சரியில்லாதவர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் காரணமாக மெல்போர்ன் விமான நிலையத்தில் பதற்றம் நிலவியது.
சினிமா பாணியில் பயணிகளே ஹீரோக்கள் போல் துரிதமாக செயல்பட்டு மிரட்டல் நபரைப் பிடித்த சம்பவம் தொடர்பான புகைப்படங்கள் சமூகவலைதளங்களில் வைரலாக பரவி பாராட்டைப் பெற்றுள்ளன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT