Last Updated : 30 Apr, 2017 06:26 PM

 

Published : 30 Apr 2017 06:26 PM
Last Updated : 30 Apr 2017 06:26 PM

பாரீஸ் பருவநிலை ஒப்பந்தம்; இந்தியா, சீனா ரஷ்யாவின் பங்களிப்பு ஒன்றுமில்லை: அமெரிக்க அதிபர் ட்ரம்ப் காட்டம்

பாரீஸ் பருவநிலை ஒப்பந்தம் ஒருதலைபட்சமாக உள்ளது, அமெரிக்கா ஏகப்பட்ட பில்லியன் டாலர்கள் தொகையை செலவழிக்கிறது ஆனால் இந்தியா, சீனா, ரஷ்யா பங்களிப்பு ஒன்றுமேயில்லை என்று அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் சாடியுள்ளார்.

பாரீஸ் ஒப்பந்தத்தில் இருப்பதா விலகுவதா என்ற முடிவை அமெரிக்கா இன்னும் 2 வாரங்களில் முடிவெடுக்கவுள்ளது. அதிபர் தேர்தல் பிரச்சாரத்தின் போதே ட்ரம்ப் பாரீஸ் பருவநிலை ஒப்பந்தத்திலிருந்து விலகுவதாக அறிவித்திருந்தார், இது குறித்து அவர் மீது கடுமையான விமர்சனங்கள் எழுந்து இன்று வரை நீடித்து வருகிறது.

இந்நிலையில் அதிபர் பதவியேற்று 100 நாட்கள் முடிந்த நிலையை கொண்டாடும் விதமாக பென்சில்வேனியாவில் கூட்டம் ஒன்றில் ட்ரம்ப் பேசும்போது, “எங்கள் நாட்டு அரசு பன்னாட்டு ஒப்பந்தங்களில் அவசரம் அவசரமாக இணைகிறது, ஆனால் இந்த ஒப்பந்தங்களோ, பாரீஸ் பருவநிலை ஒப்பந்தம் உட்பட, ஒருதலைபட்சமாக அமெரிக்காவுக்கு அதிக செலவினங்களை இழுத்து விடுகிறது, ஆனால் இந்தியா, சீனா, ரஷ்யா போன்ற நாடுகளின் பங்களிப்பைப் பார்த்தால் ஒன்றுமேயில்லை. இந்நாடுகள் எதிர்காலத்திலும் எதுவும் பங்களிப்பு செய்யப்போவதில்லை.

பாரீஸ் ஒப்பந்தம் குறித்து நான் 2 வாரங்களில் மிகப்பெரிய முடிவை எடுக்கப் போகிறேன். என்ன நடக்கிறது என்று பார்த்து விடுவோம்” என்று சவால் விடுத்தார். குறிப்பாக பாரீஸ் ஒப்பந்தத்தை ஆதரித்து அமெரிக்க தலைநகர் வாஷிங்டனில் ஆயிரக்கணக்கானோர் ஊர்வலம் மேற்கொண்ட சில மணிநேரங்களில் பாரீஸ் ஒப்பந்தம் குறித்து ட்ரம்ப் இவ்வாறு பேசியுள்ளார்.

ஏற்கெனவே பாரீஸ் பருவநிலை ஒப்பந்தத்தை கெடுக்குமாறு பல்வேறு செயல்திட்டங்களை ட்ரம்ப் எடுத்து வருவதும் குறிப்பிடத்தக்கது.

கரியமிலவாயு வெளியீட்டை இந்தியா குறைக்க நடவடிக்கைகள் மேற்கொண்டு வருவதால் அமெரிக்காவின் புதுப்பிக்கக் கூடிய எரிசக்தி உற்பத்தி நிறுவனங்களுக்கு இந்தியா பெரிய சந்தையாக மாறும் என்று ஜனநாயகக் கட்சியினர் தெரிவித்தனர்.

ட்ரம்ப் வாசித்த கவிதை:

பென்சில்வேனியா கூட்டத்தில் பேசிய அதிபர் ட்ரம்ப் இறந்து கொண்டிருக்கும் பாம்பு ஒன்றை வளர்க்கும் பெண் பற்றிய கவிதை ஒன்றை வாசித்தார், பாம்பை வளர்க்கும் அந்தப் பெண்ணையே பாம்பு கடித்து விடுகிறது என்ற கதைக்கருவில் அமைந்த கவிதையாகும் அது. இதை வாசித்து விட்டு தான் ஏன் அகதிகளை அனுமதிப்பதில்லை என்பதற்கு விளக்கம் தான் இந்தக் கவிதை என்றார்.

மேலும், “நான் சீனாவின் மிகப்பெரிய விமர்சகன். நீண்ட நாட்களாக சீனாவின் பணமதிப்பு முறைகேடு பற்றி பேசி வந்துள்ளேன். ஆனாலும் சீனா வடகொரியா எதிர்ப்பு விவகாரத்தில் நமக்கு உதவிகரமாக இருந்து வருகிறது. இது மிகப்பெரிய விஷயம்” என்று பாராட்டினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x