Published : 18 Feb 2017 09:57 AM
Last Updated : 18 Feb 2017 09:57 AM

80 பேரை பலிகொண்ட குண்டுவெடிப்பு எதிரொலி: பாக்.கில் 100 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை

பாகிஸ்தானின் சிந்து மாகாணம், செவான் நகரில் ‘லால் ஷாபாஸ் காலந்தர்’ என்ற பெயரில் பிரபல சூஃபி மசூதி உள்ளது. இந்த மசூதியில் நேற்று முன்தினம் இரவு தற்கொலைப் படை தீவிரவாதி ஒருவர் தனது உடலில் பொருத்தியிருந்த வெடிகுண்டை வெடிக்கச் செய்தார். இதில் 80 பேர் உயிரிழந்தனர். சுமார் 250 பேர் காயம் அடைந்தனர்.

பாகிஸ்தானில் கடந்த சில ஆண்டுகளில் நடத்தப்பட்ட கொடூர தாக்குதல்களில் ஒன்றாக இது கருதப்படுகிறது. மேலும் இந்த வாரத்தில் மட்டும் இதற்கு முன் 7 தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இதில் சிந்து மாகாணத்தில் மட்டும் 18 தீவிரவாதிகள் கொல்லப் பட்டனர். இங்கு கத்தோர் அருகே துணை ராணுவப் படையின் பதில் தாக்குதலில் 7 தீவிரவாதிகளும், கராச்சியின் மங்கோபிர் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட திடீர் சோதனையில் 11 தீவிரவாதிகளும் கொல்லப்பட்டனர்.

இதுபோல் வடமேற்கு எல்லைப்புற மாகாணத்தில் நேற்று 3 இடங்களில் போலீஸார் மற்றும் ராணுவத்தினரால் 12 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். இவை தவிர பாகிஸ்தானின் பல்வேறு பகுதிகளில் நேற்று மேலும் 9 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்.

இதுபோல் பாகிஸ்தான் முழுவதும் அதிரடி சோதனை, பதில் தாக்குதல் என பாதுகாப்பு படையினர் மேற்கொண்ட நடவடிக்கையில் 100 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்.

தற்கொலைப்படை தாக்குதல் நடத்தப்பட்ட செவான் நகர மசூதியில் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.





FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x