Published : 24 Jan 2014 12:00 AM
Last Updated : 24 Jan 2014 12:00 AM

அமெரிக்க பெண்களில் ஐந்து பேரில் ஒருவர் பாலியல் பலாத்காரத்தால் பாதிப்பு: ஆய்வறிக்கையில் தகவல்

அமெரிக்கப் பெண்களில் ஐந்து பேரில் ஒருவர் பாலியல் பலாத்காரத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று அமெரிக்க அதிபர் மாளிகை ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் பாலியல் பலாத்கார சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. அதைக் கட்டுப்படுத்தும் வகையில் அதிபர் ஒபாமா பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.அதன் ஒரு பகுதியாக பலாத்கார சம்பவங்களைத் தடுப்பது தொடர்பாக வெள்ளை மாளிகை சார்பில் புதன்கிழமை ஓர் ஆய்வறிக்கை வெளியிடப்பட்டது. அதில் பல்வேறு அதிர்ச்சி தகவல்கள் இடம்பெற்றுள்ளன.

பல்வேறு நாடுகள், இனங்களைச் சேர்ந்த மக்கள் வாழும் அமெரிக்காவில் அனைத்து இன பெண்களும் பாலியல் பலாத்காரத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அண்மையில் எடுக்கப்பட்ட புள்ளிவிவரங்களின்படி அமெரிக்க வாழ் இந்திய பெண்கள்- அலாஸ்கா பழங்குடியின பெண்கள் 27 சதவீதம் பேரும், கறுப்பின பெண்கள் 22 சதவீதம் பேரும், வெள்ளை இன பெண்கள் 19 சதவீதம் பேரும் ஸ்பானிஷ் இன பெண்கள் 15 சதவீதம் பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஒட்டுமொத்தமாக அமெரிக்க பெண்களில் 2.2 கோடி பேர் ஏதாவது ஒரு சம்பவத்தில் பலாத்கார கொடுமைக்கு ஆளாகியுள்ளனர். ஐந்து பெண்களில் ஒருவர் பலாத்காரத்தால் பாதிக்கப் பட்டுள்ளனர். அவர்களில் 18 வயதுக்கு உள்பட்ட சிறுமிகளின் எண்ணிக்கை அதிகம்.

இதேபோல் அமெரிக்க ஆண்களில் 16 லட்சம் பேர் தன்பாலின வன்புணர்ச்சியால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் ஆய்வறிக்கையில் சுட்டிக் காட்டப் பட்டுள்ளது. அமெரிக்காவுக்கு இடம் பெயர்ந்து வரும் பெண்கள் பாலியல் வன்முறையில் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். இந்தச் சம்பவங்களைக் கட்டுப்படுத்த சமுதாயத்தில் மாற்றங்கள் ஏற்பட வேண்டும் என்று ஆய்வறிக்கையில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x